இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் புகுந்து விட்டது. தொழில்நுட்பம் மக்களின் பயணத்தை வசதியாகவும், எளிமையாகவும் மாற்ற உதவியது. அதேபோல் உலகின் எந்த பகுதிக்கும் சரக்குகளை அனுப்புவதையும் அது சாத்தியமாக்கியுள்ளது. அடுக்கமாடி குடியிருப்பில் இ காமர்ஸ் கூரியர் சேவையாக தொடங்கிய டெல்லிவரி (Delhivery) நிறுவனம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான உருவெடுத்துள்ளது.
2011ல் நண்பர்களான சாஹில் பருவா, மோஹித் டாண்டன், பவேஷ் மங்லானி மற்றும் கபில் பாரதி ஆகியோர் Delhivery நிறுவனத்தை தொடங்கினர். இதில் சாஹில் பருவா கர்நாடகாவில் உள்ள என்.ஐ.டி.யில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். அதை தொடர்ந்து ஐ.ஐ.எம். பெங்களூருவில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

பின்பு 2005ல் மேரிலாந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற பிறகு CALCE ஆய்வகங்களில் ஆராய்ச்சி பயிற்சியாளராக 4 மாதங்கள் பணியாற்றினார். அதன் பிறகு 2007ல் Stayglad நிறுவனத்தில் பணியாற்றினார். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு முன், கடைசியாக பெயின் அண்ட் கம்பெனியில் அசோசியேட் ஆலோசகராக இருந்தார்.
2011ல் சாஹில் பருவா தனது நண்பர்களுடன் இணைந்து தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இ காமர்ஸ் கூரியர் சேவையாக டெல்லிவரி நிறுவனத்தை தொடங்கினார். அந்த கால கட்டத்தில், பல வர்த்தக நிறுவனங்கள் இ காமர்ஸ் வணிகங்களுக்கு விநியோக சேவைகளை வழங்கவில்லை. இருப்பினும் இந்நிறுவனம் தொடங்கிய 2 ஆண்டுகளுக்கு பிறகு மளிகை மற்றும் பேஷன் சில்லறை விற்பனை சந்தைகளில் களம் இறங்கியது.
இதனையடுத்து பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய நிறுவனங்களுடன் கை கோர்த்தனர். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அவர்களின் பொருட்களை டெலிவரி செய்தனர். இது அவர்களின் (பிளிப்கார்ட், அமேசான்) வழக்கமான டெலிவரி நேரத்தை விட மிக வேகமாக இருந்தது. மேலும் குறைந்தவிலையில் இன்டர்நெட் சேவை கிடைத்தால் மக்கள் நடத்தையில் மாற்றம் (ஆன்லைனில் ஆர்டர் செய்வது) ஏற்பட்டது. இதன் விளைவாக வீட்டு டெலிவரிக்கான தேவை அதிகரித்தது. அவர்களின் வர்த்தகமும் வளர்ந்தது.
2023 நவம்பர் 11 நிலவரப்படி, டெல்லிவரியின் சந்தை மூலதனம் ரூ.30,054 கோடியாக உள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாஹில் பருவா, வணிகத்தை மீட்பதிலும் அதை முன்னோக்கி கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். 2023ம் நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.7,225 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக சாஹில் பருவா மாதம் ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார். அதாவது ஆண்டுக்கு ரூ.3.1 கோடி ஊதியம் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications