உலக நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாகச் சர்வதேச முதலீட்டுச் சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. ஏற்கனவே வல்லரசு நாடுகளின் பொருளாதாரம் பணவீக்க பிரச்சனையில் மூழ்கியிருக்கும் நிலையில் புதிதாகப் பரவி வரும் கொரோனா மீண்டும் வர்த்தகச் சந்தையைப் பாதிக்கும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தையும், திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஆசியச் சந்தையும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் சுமார் 1300 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களும் அதிர்ச்சி கொடுத்து. இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் அக்டோபர் மாத உச்சத்தில் இருந்து சென்செக்ஸ் 10 சதவீதமும், நிஃப்டி 11 சதவீதமும் சரிந்து முதலீட்டாளர்களுக்கும் பெரிய அளவிலான பாதிப்பைக் கொடுத்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு
இதுமட்டும் அல்லாமல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகாரப்பூர்வமாக கரெக்ஷன் பிரிவுக்குச் சென்றுள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பே எதிர்பார்க்கப்பட்ட மும்பை பங்குச்சந்தையின் கரெக்ஷன் தற்போது உருவாகியுள்ளது.
சரிவுக்குக் காரணம்
இந்திய சந்தையின் சரிவுக்கு மிக முக்கியக் காரணமாக அதிகரித்து வரும் பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் மந்தமான முடிவுகள், அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை, அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை, மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1372.63 புள்ளிகள் சரிவு
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 1372.63 புள்ளிகள் வரையில் சரிந்து 55,639.11 புள்ளிகளை எட்டியுள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 420 புள்ளிகள் சரிந்து 16,566.80 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
ரூ. 5.19 லட்சம் கோடி இழப்பு
இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 5.19 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது, இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு 254.08 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
உலக நாடுகள்
இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியக் காரணம் உலக நாடுகளில் நடந்த சில மாற்றங்கள் தான், அமெரிக்காவில் அனைத்து மக்களையும் பூஸ்டர் ஷாட்ஸ் எடுத்துக்கொள்ள அமெரிக்க சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரும் நிலையில் ஒமிக்ரான் அச்சத்தால் ஐரோப்பா புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது, சீனா-அமெரிக்கா பிரச்சனை காரணமாகச் சீன ப்ளூ சிப் பங்குகளும் அதிகப் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
2 நாள் வர்த்தகம்
வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை வர்த்தக சரிவின் மூலம் இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 11.23 லட்சம் கோடி ரூபாய் அளவில் குறைந்துள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீடு 1850 புள்ளிகள் வரையில் சரிந்துள்ள காரணத்தால், இன்றைய வர்த்தக முடிவில் இழப்பின் பாதிப்பு பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.