என்னதான் வட்டியை வாரி வாரி கொடுத்தாலும், வங்கிகள் வழங்கும் சேமிப்புத் திட்டங்களை விட தங்கத்தில் முதலீடு செய்யும் குடும்பங்கள் தான் இந்தியாவில் அதிகம். அந்த அளவுக்கு இந்தியர்களுக்கும், தங்கத்திற்கும் பிரிக்க முடியாத பந்தம் இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்தார்கள், தற்போது நம் தாய் தந்தையரும் தங்கத்தில் தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். சரி இப்போதாவது நிலை மாறி இருக்கிறதா என்று தானே கேட்கிறீர்கள்? இப்பொழுதல்ல.. எப்பொழுதும் தங்கத்திற்கான தேவை இந்தியாவில் இருந்து கொண்டே தான் இருக்கும். தங்கம் ஒரு முக்கியமான பிசிக்கல் அசெட். எப்பொழுது வேண்டுமானாலும் தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெறலாம்.
அதனால் தான் இந்தியா தங்க நுகர்வில் முதலிடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் எவ்வளவு தங்கம் வாங்கப்படுகிறது தெரியுமா? வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் (World Gold Council) அறிக்கையின்படி இந்தியர்கள் நாளொன்றுக்கு ரூ.2,200 கோடி மதிப்பிலான தங்கத்தை வாங்குகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அப்படியானால் ஒவ்வொரு நாளும் 2.2 டன் தங்கத்தை இந்தியர்கள் வாங்குகின்றனர்.
ஒரு நாளைக்கு தங்கத்தில் இவ்வளவு செலவு செய்யும், இந்தியர்களின் தங்க மோகம் பிற நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 800 முதல் 900 டன் வரையில் தங்கம் விற்பனையாகிறது. இந்தியாவின் தங்க நுகர்வில் கிட்டத்தட்ட 99 சதவீதம் வெளிநாட்டிலிருந்து தான் வருகிறது. உள்நாட்டில் தங்க உற்பத்தி மிக குறைவாகவே இருக்கும் காரணத்தினால் இந்தியா இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கிறது.

தங்கம் எந்தெந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகிறது தெரியுமா? மொத்த இறக்குமதியில் கிட்டத்தட்ட 40% வரையிலான தங்கம் சுவிட்சர்லாந்தில் இருந்து தான் வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் அதன் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தங்க நுகர்வில் சுமார் 16 சதவீதம் இங்கிருந்து வருகிறது. பின்னர் தென் ஆப்பிரிக்கா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் இருந்தும் தங்கம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் கிட்டத்தட்ட 75% மட்டும் தான் ஆபரணங்கள் செய்வதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 25% கோல்டு பார்கள் மற்றும் கோல்டு காயின்கள் செய்வதற்கு பயன்படுகின்றன. இந்தியாவில் குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் தங்கத்திற்கான தேவை பிற மாநிலங்களை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் அதீத மோகம் இந்திய பொருளாதாரத்திற்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
தங்கத்திற்கு தேவை இருக்கிறது என்ற காரணத்தினால், அதிக அளவில் இறக்குமதி செய்யும் போது அந்நிய செலவாணி கையிருப்பு குறைகிறது. அதோடு வர்த்தக பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இதைத் தடுத்து பொருளாதாரத்தை சீரமைக்கும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக அவசியமின்றி தங்கம் வாங்குவதை அடுத்த ஓராண்டுக்கு குறைத்துக் கொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் நிபுணர்கள், என்ன தான் தங்க விலை உயர்ந்தாலும் மக்கள் தொடர்ந்து தங்கம் வாங்குவார்கள் என்று கணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications