தமிழ்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு, முதலீட்டு மற்றும் வருவாய் ஆகியவற்றை அதிகரிக்கவும், அதேவேளையில் தமிழ்நாட்டின் மக்களின் வாழ்வை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் அமைத்த குழு தான் பொருளாதார ஆலோசனை குழு.
பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மக்களின் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் வல்லுனர்களாக விளங்கும் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ரியர் ஜீன் ட்ரீஸ், எஸ்.நாராயண் ஆகியோரை தேர்வு செய்து பொருளாதார ஆலோசனை குழுவில் நியமித்தது தமிழக அரசு.
தமிழ்நட்டை போலவே ஆந்திர பிரதேச மாநிலமும் முக்கியமான ஒரு அதிகாரியை அரசின் பொருளாதார ஆலோசகராக நியமித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவரான ராஜ்னிஷ் குமார் அவர்களை ஆந்திரப் பிரதேச அரசு புதிய ஆலோசகராக நியமித்துள்ளது. இப்புதிய பதவியில் ராஜ்னிஷ் குமார் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பொருளாதார ஆலோசகரா இருப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜ்னிஷ் குமார்
இதுகுறித்து ராஜ்னிஷ் குமார் கூறுகையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்குவது மட்டும் அல்லாமல், அம்மாநிலத்திற்குத் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து முதலீட்டை ஈர்க்கவும் உதவி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
கோட்டாக் மற்றும் HSBC
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் பதவியில் இருந்து ராஜ்னிஷ் குமார் ஓய்வு பெற்ற பின்பு, இரு முக்கியமான அமைப்பின் முக்கியப் பதவிகளை வகித்து வருகிறார். கோட்டாக் ஸ்பெஷல் சிச்சுவேஷன் பண்ட்-ன் ஆலோசகராகவும், HSBC ஆசியாவின் நேரடி நிர்வாகத்தில் இல்லாத தலைவராக நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்.
மாநில அரசின் பணி
தனியார் அமைப்புகளில் பணியாற்றி வந்தாலும், மாநில அரசுடன் பணியாற்றுவதில் எவ்விதமான பிரச்சனை இல்லை. இதனால் தற்போது இருக்கும் பதவிகள் மற்றும் பணிகள் உடன் ஆந்திரப் பிரதேச மாநிலத்துடனும் பணிகளைத் தொடர்வேன் என ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பிரிவுக்குப் பின்பு இரு மாநிலத்திலும் வர்த்தகம், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பல முக்கியப் பணிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அதிகளவில் ஈர்த்துள்ள நிலையில், தெலுங்கானா ஐடி மற்றும் ஐடி சேவை சார்ந்த நிறுவனங்களை அதிகளவில் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு அரசு
சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொருளாதார ஆலோசனை குழு பற்றி இந்திய முழுவதும் வியந்து பேசப்பட்ட நிலையில், தற்போது ஆந்திர பிரதேசம் முக்கிய முயற்சியை எடுத்துள்ளது. இதன் மூலம் ஆந்திர பிரதேசத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்றாலும் கணிசமான மாற்றத்தைக் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியும்.