சமூக வலைத்தளத்தில் டிசைன் டிசைனாகப் பல மோசடிகள் நடந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடா பெயரிலேயே மோசடி நடந்துள்ளது.
இதைவிட முக்கியமான விஷயம் இந்த மோசடியை கண்டுப்பிடித்தது யார் என்பது தான்..!!!
பேஸ்புக்
உலகிலேயே மிகப்பெரிய சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் மோசடியாளர்கள், போலி நிறுவனங்கள் என மக்களை ஏமாற்றும் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த பல உத்திகளை பேஸ்புக் பயன்படுத்தினாலும் எவ்விதமான பலனும் இல்லை, தொடர்ந்து மோசடிகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
ரத்தன் டாடா
இந்த நிலையில் ரத்தன் டாடா பெயரில் ஒரு போலி அறக்கட்டளையைப் பக்கத்தை உருவாக்கிப் பல பேரிடம் மோசடிகள் நடந்து வருவது ரத்தன் டாடா அவர்களே கண்டுப்பிடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரத்தன் டாடா உரிய நடவடிக்கையும் எடுத்துள்ளார்.
ரத்தன் டாடா பவுண்டேஷன்
'ரத்தன் டாடா பவுண்டேஷன்' எனப் பெயர் கொண்ட பேஸ்புக் பக்கம் போலியானது என்று அவரே ரிப்போர்ட் செய்துள்ளார். இந்தப் போலி பேஸ்புக் பக்கத்தின் மூலம் தனது பெயரை பயன்படுத்தி மக்களிடம் பணத்தை ஏமாற்றுவதாகவும், தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களின் பெயரில் மோசடி செய்வதாகவும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
பணம் பெறுவது இல்லை
இது மட்டும் அல்லாமல் 84 வயதான டாடா, தனது பாலோவர்களுக்கு "நாங்கள் எந்த வகையிலும் பணத்தைப் பெறுவது இல்லை" என்று விளக்கி போலி கணக்குகள், பேஸ்புக் பக்கங்கள் மூலம் ஏமாற வேண்டாம் என எச்சரித்தார். ரத்தன் டாடா ரிப்போர்ட் செய்ததைத் தொடர்ந்து 'ரத்தன் டாடா பவுண்டேஷன்' எனப் பெயர் கொண்ட பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது.
புகார்
இந்த 'ரத்தன் டாடா பவுண்டேஷன்' பக்கத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராகத் தனது குழு "கடுமையான சட்ட நடவடிக்கை" எடுக்கும் என்று ரத்தன் டாடா கூறியுள்ளார். டாடா பெயரைப் பயன்படுத்தும் பக்கங்கள் மற்றும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும், உறுதி செய்துகொள்ளவும், talktous@tatatrusts.org என்ற மின்னஞ்சல்-க்கு எழுதுவதன் மூலம் சரிபார்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.