நிலவி வரும் பொருளாதார மந்த நிலையில் மத்திய அரசுக்கு எந்த பக்கம் திரும்பினாலும் அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. அதிலும் கடந்த சில மாதங்களாகவே வரி வசூலும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அது சற்று கைகொடுத்துள்ளது என்றே கூறலாம்.
குறிப்பாக உற்பத்தி துறையை மேம்படுத்த அரசு, கடந்த மாதம் உற்பத்தி துறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைத்தது. இது சற்று கைகொடுத்துள்ளது.
ஏனெனில் கடந்த சில மாதங்களாகவே உற்பத்தி துறையில் இருந்து வரும் வீழ்ச்சி, அதிலும் ஜிஎஸ்டி விகிதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆட்டோமொபைல் துறையிலும் வீழ்ச்சியே நிலவி வந்தது. எனினும் கடந்த விழாக்கால விற்பனைக்காக, வாகன உற்பத்தி நிறுவனங்களும் விற்பனையை அதிகரிக்க பல சலுகைகளை வாரி வழங்கின.
இந்த நிலையில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூலானது 5.29 சதவிகிதம் குறைந்து, 95,380 கோடி ரூபாயாக உள்ளது. இதே முந்தைய ஆண்டில் அக்டோபர் மாதத்தில் 1,00,710 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த செப்டம்பர் மாதத்தில் 91,916 கோடி ரூபாயாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வரி அமலுக்கு கொண்டு வரப்பட்ட சில மாதங்களில், மாதம் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய நிலையில், மத்திய அரசு கொண்டாட்டத்தில் இருந்து வந்தது என்றே கூறலாம். எனினும் தொடர்ந்து 4-வது மாதமாக இது 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டவில்லை. குறிப்பாக மாதத்திற்கு மாதம் குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுபோது அக்டோபரில் கொஞ்சம் பரவாயில்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் சி.ஜி.எஸ்.டி வசூல் ஆனது 17,582 கோடி ரூபாய் என்றும், இதே எஸ்.ஜி.எஸ்.டி வசூலானது 23,674 கோடி ரூபாய் என்றும், இதே ஐ.ஜி.எஸ்.டி வசூலானது 46,517 கோடி ரூபாய் வசூல் என்றும், செஸ் வரி 7,607 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகவும் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருவாயை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வரும் நிலையில், அதிலும் உற்பத்தி துறை மீண்டு வர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இனி வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வரி வசூலானது அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது