டெல்லி: மத்திய அரசுக்கு எல்லா பக்கமும் அடிமேல் அடி விழுந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக உற்பத்தி துறையில் வீழ்ச்சி, ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி என எந்தத் துறை எடுத்தாலும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
இதன் காரணமாக ஜிஎஸ்டி வசூலும் குறைந்து கொண்டே வந்தது. அதிலும் தொடர்ந்து சில மாதங்களாகவே 1 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் வசூலாகியது.
இவ்வரி அமலுக்கு கொண்டு வரப்பட்ட சில மாதங்களில், மாதம் 1 லட்சம் கோடி ரூபாயை வசூல் தாண்டியது. ஆனால் கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவி வரும் மந்த நிலையின் எதிரொலியாக 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டவே இல்லை.
கடந்த செப்டம்பர் மாதத்தில் 91,916 கோடி ரூபாயாக வசூல் செய்திருந்தது. அதுவும் இந்த வசூல் தொகையானது கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த வசூல் என்றும் கூறப்பட்டது. எனினும் நவம்பர் மாதத்தில் 1.03 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த வரி விதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பொருளாதார மந்தநிலையால் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது நவம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 3 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதுவே கடந்த டிசம்பர் மாதத்திலும் ஜிஎஸ்டி வரி வருவாய் 1.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு டிசம்பர் 2018ல் 94,726 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த 1.03,184 கோடி ரூபாய் மொத்த ஜிஎஸ்டி வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. 19,962 கோடி ரூபாய் என்றும், மாநில ஜிஎஸ்டி 26,792 கோடி ரூபாயும், இதே ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் 48,099 கோடி ரூபாய் எனவும், இதுவே கூடுதல் செஸ் வரி 8,331 கோடி ரூபாய் என வசூலாகியுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.