இந்திய மக்கள் தங்கம் வாங்குவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அண்மையில் தங்கம், மீதான இறக்குமதி வரியை 6%இல் இருந்து 15%ஆக உயர்த்தியது. ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதால் கைவசம் இருக்கும் அமெரிக்க டாலரை தக்க வைக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்தது.
தங்கம் இறக்குமதியை இன்னும் கட்டுப்படுத்தும் வகையில் அடுத்தகட்டமாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. இத்தகைய சூழலில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறை, தங்கம் இறக்குமதி செய்யும் வங்கிகளுக்கு அவசர உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 2023-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்ட தங்க உலோகக் கடன்கள் (Gold Metal Loans - GML) மற்றும் தங்கத்தின் மீதான கடன்கள் (Loan against Gold) பற்றிய அனைத்து விவரங்களையும் அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

இதில் தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற சில முன்னணி வங்கிகள் , சர்வதேச வங்கிகளிடம் இருந்து தங்கத்தை கடனாகப் பெற்று, அதை உள்நாட்டு நகைக் கடைக்காரர்களுக்கு/ஏற்றுமதியாளர்களுக்குக் கடனாக வழங்குவார்கள். இதற்கு 'கோல்ட் மெட்டல் லோன்' என்று பெயர். அதே வேளையில் பொதுமக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வாங்கும் கடன்கள் தங்கத்தின் மீதான கடன்கள் என அழைக்கப்படுகின்றன.
2023ஆம் ஆண்டு முதல் கடனாகக் கொடுக்கப்பட்ட தங்கத்தின் அளவு மற்றும் அதன் மதிப்பு, வங்கியிடம் அடமானம் வந்த தங்கம், வாடிக்கையாளர்கள் மற்றும் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை, சர்வதேச அளவில் தங்கத்தை சப்ளை செய்யும் நிறுவனங்களின் விவரங்கள், வங்கிகள் வைத்துள்ள தங்கக் கடன்களின் மொத்த அளவு (Portfolio size) மற்றும் அதற்குப் பெறப்பட்ட பிணையங்கள் (Collateral) ஆகியவற்றை அறிக்கை தாக்கல் செய்ய வங்கிகளுக்கு ஆணையிட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி மதிப்பு 24% உயர்ந்து $71.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 721 டன்கள். இது கடந்த ஆண்டை விடக் குறைவு என்றாலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் அதற்காக இந்தியா செய்த செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தங்கம் இறக்குமதியை குறைத்து அதற்கான செலவை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சில நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருகிறதாம்.
ஏற்கனவே தங்கத்திற்கான இறக்குமதி வரி 15%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஜூன்-ஜூலை மாதங்களில் தங்கத்திற்கான தேவை குறைவாக இருக்கும் என்பதால், இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசு மேலும் சில புதிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று வங்கி வட்டாரங்கள் கருதுகின்றன. இதற்காகவே இந்த அறிக்கை கேட்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து புதிய தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தூய்மையாக்கப்பட்ட 'டோர் கோல்ட்' (Dore Gold ) மற்றும் வீட்டில் முடங்கிக்கிடக்கும் தங்கத்தை மறுசுழற்சி செய்து நகைக் கடைக்காரர்களுக்குக் கடனாக வழங்கலாம் என துறை சார்ந்த நிபுணர்கள் யோசனை கூறுகின்றனர்.மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக, உள்நாட்டில் சுத்திகரிக்கப்பட்ட தங்கக் கட்டிகளை வாங்கலாம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications

