டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 41வது கூட்டம் வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில், இரு சக்கர வாகனங்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படலாம் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் தனது கோரத் தாண்டவத்தினை காட்டி வரும் கொரோனாவினால் அனைத்து துறைகளும் ஆட்டம் கண்டு வருகிறது. எனினும் கடந்த ஆண்டு முதல் கொண்டே ஆட்டோமொபைல் துறையானது பெரும் வீழ்ச்சியில் இருந்து வருகிறது.
ஆட்டோமொபைல் துறையில் மீண்டும் வளர்ச்சி துளிர்விட ஆரம்பித்த நிலையில் தான், கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கன் இத்துறையில் மீண்டும் தலை விரித்தாட ஆரம்பித்தது.
பின்னடைவில் ஆட்டோமொபைல் துறை
ஆக மிக நீண்ட காலமாக பின்னடைவில் உள்ள இந்த நிறுவனங்கள், தற்போது கொரோனா காரணமாக விற்பனை மற்றும் உற்பத்தியிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக மக்கள் கையிலும் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. அதோடு பலரும் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர்.
இரு சக்கர வாகனங்களின் அவசியம்
இது தான் இப்படி எனில், தற்போது நாடு முழுவதிலும் பல பகுதிகளில் பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் இரு சக்கர வாகனத்தினை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதே சில பகுதிகளில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், சுகாதாரம் மற்றும் தனி மனித இடைவெளி காரணமாக மக்கள், பொதுபோக்குவரத்தினை பயன்படுத்த யோசிக்கின்றனர்.
ஜிஎஸ்டி விகிதத்தினை குறைக்க வேண்டும்
எல்லாவற்றையும் விட மிக நீண்டகாலமாகவே இரு சக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி விகிதத்தினை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இதற்கிடையில் தான் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், இரு சக்கர வாகனம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆக நாளை நடக்க விருக்கும் கூட்டத்தில் இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்பு
தற்போது இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 28% ஆக உள்ள நிலையில், இதில் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது துவண்டு போன நிலையில் உள்ள இரு சக்கர வாகன விற்பனையில் நிச்சயம் ஒரு மாற்றத்தினை கொண்டு வரலாம் என்றும் பெரிதும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.