எஃப் எம் சி ஜி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமன ஜில்லெட் இந்தியா, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் அதன் நிகரலாபம் 2.5 மடங்கு அதிகரித்து, 67.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 27.53 கோடி ரூபாயாக இருந்தது.
இதன் லாபம் இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ள நிலையில், அதன் பங்குதாரர்களுக்கும் அதன் பலனை கொடுக்கும் விதமாக, 10 ரூபாய் முகமதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்குக்கு 36 ரூபாய் டிவிடெண்டினை வழங்க இயக்குனர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த ஈவுத் தொகையானது இந்த ஆண்டு நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் மாதத்தில் வழங்கப்படலாம் என தெரிகிறது.
வரிக்கு பிந்தைய லாபம்
இந்த நிறுவனத்தின் நிகரலாபம் அதிகரித்திருந்தாலும், வரிக்கு பிந்தைய லாபம் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 2.5% குறைந்து, 69.31 கோடி ரூபாயாக உள்ளது. இது இன்னும் மதிப்பாய்வில் உள்ளதாகவும் இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வருவாய்
இந்த எஃப் எம் சி ஜி நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் விகிதமானது 26.82% அதிகரித்து, 552.89 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் 2021ம் காலாண்டில் 435.98 கோடி ரூபாயாக இருந்தது. இதே மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது 2.4% குறைந்துள்ளது. இது மார்ச் காலாண்டில் 566.52 கோடி ரூபாயாக இருந்தது.
நுகர்வு சரிவு
ஜில்லேட் நிறுவனம் சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான சவால்களுக்கு மத்தியில் , பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக விலைவாசி அதிகரிப்பால் மக்களின் நுகர்வு சரிந்தது.
இதன் விற்பனையானது கடந்த ஆண்டினை காட்டிலும் 12% அதிகரித்து, 2256 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டு நிலவரம்
கடந்த நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 7% குறைந்து, 289 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது பெரும்பாலும் பணவீக்கத்திற்கு பின்னால் சரிவினைக் கண்டிருந்தது. எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் விற்பனை 34% அதிகரித்தும், வரிக்கு பிந்தைய லாபம் 26% அதிகரித்துள்ளது.
நல்ல முடிவு
ஜில்லெட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் எல் ஜி வைத்தியநாதன் கூறுகையில், ஒரு வலுவான போர்ட்போலியோ மேன்மை, உற்பத்தித் திறன், ஆக்கப்பூர்வமான இடையூறு மற்றும் சுறுசுறுப்பான மற்றும் பொறுப்பான நிர்வாக அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நல்ல முடிவினை வழங்க காரணமாக அமைந்துள்ளது.