இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்கு உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று உள்ளது.
இந்த உத்தரவு செல்லாது என ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் இணைந்து இந்திய நீதிமன்றத்தின் வாயிலாக முயற்சி செய்த நிலையில் பல முயற்சிகளுக்குப் பின்பும் இந்திய நீதிமன்றமும் அமேசானுக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கொடுத்தது.
இந்நிலையில் பியூச்சர் குரூப் மீண்டும் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இந்திய ரீடைல் சந்தை
இந்திய ரீடைல் சந்தையில் அனைத்து தரப்பினரும் மிகவும் எதிர்பார்த்து இருந்த சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் பியூச்சர் குரூப் தொடுத்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
சர்வதேச நடுவர் நீதிமன்றம்
சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் பியூச்சர் குரூப், அமேசான் பெற்ற தடை உத்தரவை நீக்கவும், ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் தொடரவும் கோரிக்கை வைத்து அப்பீல் செய்திருந்தது.
ரிலையன்ஸ் ரீடைல்- பியூச்சர் குரூப்
இந்த மனுவை விசாரித்த சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றம் தடை உத்தரவை நீக்க முடியாது எனத் திட்டவிட்டமாகக் கூறியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் அமேசான் நிறுவனமும் இதற்குச் சம்மதம் தெரிவிக்காத நிலையில் சர்வதேச நடுவர் நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல்- பியூச்சர் குரூப் மீண்டும் தோல்வி அடைந்து அமேசான் மீண்டும் வெற்றி அடைந்துள்ளது.
பியூச்சர் கூப்பன்ஸ்
பியூச்சர் குரூப் குழுமத்தின் கிளை நிறுவனமான பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் அமேசான் முதலீடு செய்த போது தனது சக போட்டி நிறுவனங்கள் யாருக்கும் வர்த்தகத்தை விற்பனை செய்யக் கூடாது என்ற முக்கியமான கண்டிஷன் உடன் முதலீடு செய்தது.
கட்டுப்பாட்டை மீறிய பியூச்சர் குரூப்
ஆனால் பியூச்சர் குரூப் இந்தக் கட்டுப்பாட்டை மீறி தனது வர்த்தகம் மற்றும் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது என அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்குத் தடை உத்தரவைப் பெற்றது. தற்போது இந்த வழக்கில் மீண்டும் அமேசானுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
பேச்சுவார்த்தை
ஆனால் சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் பியூச்சர் குரூப் மீண்டும் தோல்வி அடைந்தால் நீதிமன்றத்திற்கு வெளியில் பேச்சுவார்த்தை மூலம் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் - அமேசான் மத்தியிலான பிரச்சனையை முடித்துக்கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.