2022ஆம் நிதியாண்டில் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கடந்த ஆண்டை விட வங்கி மோசடியால் இழக்கப்பட்ட பணத்தின் மதிப்பு பாதிக்கும் குறைவானது என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம் வளர வளர வங்கி மோசடிகளும் அதிகமாகி வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வங்கி மோசடி குறித்த புகார்கள் சைபர் கிரைம் காவல்துறைக்கு அதிகமாக வருகிறது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக அதிகமான எண்ணிக்கையில் வங்கி மோசடி நடந்திருந்தாலும், கடந்த ஆண்டு மோசடி செய்யப்பட்ட தொகையில் பாதி தான் இந்த ஆண்டு நடந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி மோசடிகள்
கடந்த 2021 ஆம் நிதியாண்டில் 7,359 மோசடிகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அதன் மொத்த மதிப்பு உருவாகி 1.38 லட்சம் கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் 2022 நிதி ஆண்டில் 9103 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.60,41 கோடி என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு தகவல் ஆகும்.
புகார்கள் எண்ணிக்கை
வங்கி மோசடியின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு குறைவாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைய கூடாது என்றும் ஏனெனில் வங்கியில் நடந்த மோசடி குறித்து அளிக்கப்பட்ட புகாரின் விசாரணை ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம்
சில புகார்கள் அளிக்கப்பட்ட ஒரு ஆண்டுகள் கழித்தும் அந்த புகார்களுக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதாகவும் அதற்கு காரணம் வங்கி நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள், சரியான தொழில்நுட்பத்தைக் இன்னும் பயன்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை
வங்கி மோசடிகளில் பெரும்பாலானவை இணையத்தின் மூலம் பரிவர்த்தனை செய்வதிலும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவதிலும் தான் நடந்துள்ளது என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
மேலும் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட மோசடி புகார் 66 சதவிகிதம் என்றும், தனியார் வங்கிகளிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட மோசடி புகார் 29 சதவீதம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பிக்கை
வங்கி மோசடிகள் நடைபெறும் போது பாதிக்கப்பட்ட பயனாளருக்கு உடனுக்குடன் தீர்வு கிடைத்தால் மட்டுமே வங்கிகள் மீது வங்கி பயனாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றும், எனவே மோசடியை கண்டுபிடிக்க கூடுதல் தொழில்நுட்பத்தை வங்கி நிர்வாகம் பயன்படுத்த வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.