சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இந்திய சந்தையிலும் தொடர்ந்து வரலாற்று உச்சத்தினை எட்டி வருகின்றது. இதன் காரணமாக ஆபரண தங்கத்தின் விலையும் உச்சத்தில் காணப்படுகின்றது.
சமீபத்திய வாரங்களாகவே சவரனுக்கு 43,000 ரூபாயினையும் தாண்டியுள்ளது. இந்த போக்கே, நீண்டகாலத்திற்கு தொடரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தங்கம் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தள்ளுபடி சலுகையானது டீலர்களுக்கு அதிகரித்துள்ளது. இது தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.
தள்ளுபடி விலையில் தங்கம்
இந்தியாவில் தங்கம் விலையானது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், தங்கத்திற்கு அளிக்கப்படும் தள்ளுபடியும் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் காணப்படுகின்றது. முந்தைய வாரத்தில் டீலர்கள் 24 டாலர்கள் தள்ளுபடியினை கொடுத்த நிலையில், தற்போது அவுன்ஸுக்கு 42 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு சந்தையில் விலை குறைய காரணமாக அமையலாம்.
இறக்குமதி வரி அதிகம்
இந்தியா தனது தேவையில் பெரும்பகுதி தங்கத்தினை இறக்குமதி செய்தே பூர்த்தி செய்து வருகின்றது. இதற்கிடையில் இந்தியாவில் தேவையானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், விலை அதிகரிப்பு அதில் பாதிப்பினை ஏற்படுத்தால் என்ற அச்சம் இருந்து வருகின்றது.
தங்கம் விலை அதிகரிப்பு மட்டும் அல்ல, இந்திய டீலர்கள் 15% இறக்குமதி வரி, 3% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆக இது மேற்கொண்டு விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
வரி குறைக்க வேண்டும்?
இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 10 கிராமுக்கு 57,125 ரூபாயினை எட்டியது. இதற்கிடையில் வரவிருக்கும் பட்ஜெட் ஆனது பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படவிருக்கின்றது. இந்த நிலையில் நகை கடை வட்டாரங்களில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியினை குறைக்க வேண்டும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
ஜூலை மாதம் அதிகரித்தது?
கடந்த ஜூலை 2022ல் அரசு அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, 15% ஆக இறக்குமதி வரியினை அதிகரித்தது. இதன் காரணமாக தங்கம் இறக்குமதியானது கணிசமான சரிவினைக் கண்டது. அதேசமயம் தங்கம் விலையும் தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையில், தொடர்ந்து இன்னும் வரி விகிதம் சேர்க்கும்போது விலை உச்சத்தில் காணப்பட்டது. இதன் காரணமாக விலையினை கட்டுப்படுத்த அரசு தங்கம் மீதான வரி குறைப்பு குறித்து ஆலோசிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு ஏற்றம் தெரியுமா?
கடந்த 2022ம் ஆண்டில் தங்கம் ஆனது இரு இலக்கில் லாபம் கொடுத்த நிலையில், தொடர்ந்து நடப்பு ஆண்டிலும் தங்கம் விலையானது உச்சம் எட்டி வருகின்றது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 3 - 4% அதிகரித்துள்ளது. இது கடந்த நவம்பர் மாதத்தில் பெரும் சரிவினை கண்ட நிலையில், அங்கு இருந்து ஏற்றம் காண ஆரம்பித்த தங்கம், தற்போது சுமார் 14% ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து அமெரிக்க டாலர் மதிப்பு, பத்திர சந்தை சரிவால், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்பட்டது.
இனி என்னவாகும்?
தற்போது மேற்கத்திய நாடுகளில் ரெசசன் அச்சம் இருந்து வரும் நிலையில், இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இனியும் இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 58,000 - 59,000 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே டாலரில் அவுன்ஸூக்கு 2060 - 2100 டாலர்களை எட்டலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வட்டி விகிதம்
ஜனவரி 31 - பிப்ரவரி 1 அன்று பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வட்டியானது அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. எப்படியிருப்பினும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா? ரெசசன் அச்சம் இனியும் அதிகரிக்குமா? இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த தள்ளுபடியான விலை குறைப்புக்கு வழிவகுக்குமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.