சென்னை ரீடைல் சந்தையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து ஒரு கிராமுக்கு 600 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் இதேவேளையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 4 நாட்களாக உயர்ந்து 7 வார உயர்வை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை என்பது சர்வதேச சந்தை விலை மற்றும் டாலர் மதிப்பின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வோர் சென்னை ரீடைல் சந்தை விலையை காட்டிலும் சர்வதேச சந்தை விலை போக்கை ஆய்வு செய்து முதலீடு செய்வதே சரியானதாக இருக்கும்.

அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக ஈரான் - ஓமான் மத்தியில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை மூலம் ஈரான் - அமெரிக்க போர் நிறுத்தும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது மட்டும் அல்லாமல் ஹார்முஸ் நீரிணை நிரந்தரமாக திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டாலர் மதிப்பும், அமெரிக்க அரசு பத்திரத்தின் மீதான லாபம் குறைந்து காணப்படுகிறது.
இதன் எதிரொலியாக முதலீட்டு சந்தையில் பணபுழக்கத்தின் போக்கு தங்கத்தின் மீது திரும்பியது. இதன் விளைவாகவே தினமும் 20-30 ரூபாய் உயரும் தங்கம் விலையில் கடந்த 2 நாட்களாக 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
எனவே கடந்த ஒரு மாதமாக 4000 - 4100 டாலர் விலையில் வர்த்தகமான ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2 நாட்களில் பதிவான உயர்வு மூலம் இன்றைய 0.5 சதவீத உயர்வையும் சேர்த்து 4265 டாலரை தொட்டு உள்ளது. இந்த அதிரடி உயர்வின் மூலம் ஜூன் 18ஆம் தேதிக்கு பின்பு தங்கம் விலை அதிகப்படியான உயர்வை பதிவு செய்துள்ளது. இதோடு பிப்ரவரி மாதத்திற்கு பின்பு அதாவது அமெரிக்கா - ஈரான் போர் துவங்கிய பின்பு அதிகப்படியான வாரந்திர உயர்வை பதிவு செய்ததின் விளைவாக கடந்த ஒரு வாரத்தில் சர்வதேச சந்தையில் ஸ்பாட் விலை 3.94 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. சென்னை ரீடைல் சந்தையில் ஒரு வாரத்தில் 3.73 சதவீதம் வரையில் 24 கேரட் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வின் போக்கு தொடர்ந்தால் 200 நாள் SMA அளவீடுகள் கடந்து தங்கம் விலை 5000 டாலர் வரையில் உயரும் பாதையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின்பு உயர்வதற்கு முக்கியமான மற்றும் அடிப்படை காரணம் ஈரான் - அமெரிக்க போர் நிறுத்தம் தான். தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு வழிவகுத்தால் கச்சா எண்ணெய் சப்ளை அதிகரித்து அதன் விலை குறையும்.
இதனால் இந்தியா, அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் பணவீக்கம் உயர்வதற்கான அச்சம் குறைந்து வட்டி உயர்வுக்கான தேவையும் குறையும். இதனால் ஒட்டுமொத்த முதலீடு சந்தையும் ரீசட் மோடுக்கு செல்லும் நிலைக்கு திரும்பும் நிலைக்கு வந்துள்ள காரணத்தால் தங்கம் விலை மீண்டும் உயர துவங்கியுள்ளது. இதேவேளையில் இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் மீண்டும் போர் வெடிக்கும், தங்கம் விலை சரியும்.


Click it and Unblock the Notifications

