சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தங்கம் வாங்க வேண்டாம் எனக் கூறியதற்கு பின்னணியில், மத்திய அரசு தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
வீட்டு லாக்கர்களிலும், பீரோக்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத தங்கத்தை மீட்டெடுத்து, அதன் மதிப்பை அதிகரிக்கும் வகையில் 'கோல்ட் மானிடைசேஷன் 2.0' திட்டம் ஆகஸ்ட் 2026-ல் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய குடும்பங்களின் கையில் உள்ள தங்கத்தின் அளவு அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்ந்துள்ளது. சுமார் 30,000 டன் தங்கம் வெறும் லாக்கர்களிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
இந்த தங்கத்தை வங்கிகள் மற்றும் நகைக்கடைகள் மூலம் பயன்படுத்தி, தங்கத்திற்காக இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கவும், ரூபாயின் மதிப்பு அழுத்தத்தை தணிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
2015 திட்டத்தின் தோல்வி பாடங்கள்
2015-ல் மோடி அரசு முதன்முறையாக கொண்டு வந்த கோல்ட் மானிடைசேஷன் திட்டம் பெரும் தோல்வியை சந்தித்தது. 10 கிராம் முதல் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டபோது, 0.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் வைப்பு வைக்கப்படும் தங்கத்திற்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் இருந்த 30,000 டன் தங்கம் இருந்த நிலையில் வெறும் 39 டன் மட்டுமே (0.13 சதவீதம்) டெபாசிட் செய்யப்பட்டது.
இதன் மூலம் கோல்ட் மானிடைசேஷன் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை, இதேபோல் தங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான முக்கியத்துவம், வங்கிகளின் பிரமோஷன் பற்றாக்குறை ஆகியவை தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. திருமண நகைகள், பாட்டி-தாத்தா கொடுத்த ஆபரணங்கள் போன்றவற்றை வங்கியில் ஒப்படைக்க மக்கள் தயங்கினர்.
2.0 திட்டத்தில் என்ன புதுமை?
புதிய திட்டத்தில் முக்கிய மாற்றம் என்னவென்றால், நகைக்கடை உரிமையாளர்களை ஸ்டேக்ஹோல்டர்களாக இணைப்பது. மக்கள் தங்கள் நகைகளை நம்பிக்கையுடன் நகைக்கடைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நகைக்கடை உரிமையாளர்கள் தங்கத்தை உருக்கி அங்கீகரிக்கப்பட்ட ரிஃபைனர்களுக்கு அனுப்பி, அதை வங்கி டெபாசிட் ஆக்குவர். இதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும் என அரசு நம்புகிறது.
மேலும், இறக்குமதி சார்பை குறைத்து, உள்நாட்டு தங்கத்தை ரீசைக்கிள் செய்யும் வாய்ப்பு உருவாகும். இது நகைக்கடைகளுக்கு மூலப்பொருள் கிடைக்க உதவும். வட்டி விகிதத்தை 2 சதவீதத்துக்கு மேல் உயர்த்தி, லாக்-இன் காலத்தை நெகிழ்வாக்கி, ரிடெம்ப்ஷன் வசதிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நன்மைகள்
இந்த திட்டம் வெற்றி பெற்றால், தங்க இறக்குமதிக்கான டாலர் செலவு கணிசமாக குறையும். ரூபாய் மதிப்பு பலப்படுத்தப்படும். வீட்டு லாக்கர்களில் உள்ள பயன்படுத்தப்படாத தங்கம் பொருளாதார சுழற்சிக்கு வரும். தற்போது மூத்த அமைச்சர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் தங்கத் தொழில் பிரதிநிதிகளுடன் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய பொருளாதாரத்துக்கு தங்கம் ஒரு பெரிய சொத்து. இதை சரியாக பயன்படுத்தினால், வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும். புதிய திட்டத்தின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கு உதவும்..
இத்திட்டம் உண்மையில் யாருக்கு உதவும் என்றால், வீட்டில் தங்க பார், காயின்களாக வைத்திருக்கும் அனைத்து தரப்பினருக்கும் பெரிய அளவில் உதவும். காரணம் பார், காயின்களை உருக்கி அடமானம் வைக்கும் போது பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. ஆனால் நகைகளை உருக்கி இத்திட்டத்தின் செய்கூலி, சேதாரமாக செலுத்தப்பட்ட தொகை பெரிய அளவில் பாதிக்கும்.
இதேபோல் நகைகடைக்காரர்கள் இதில் இணையும் காரணத்தால், ஒரு கடையில் வாங்கிய நகையை அதே கடையில் திருப்பி கொடுப்பது மூலம் தரத்தில் வித்தியாசமோ அல்லது குறைவோ ஏற்படாது, தங்கத்திற்கான முழு மதிப்பு பெற முடியும்.


Click it and Unblock the Notifications