கோயில்கள், வீட்டின் பீரோ, வங்கி லாக்கர் என இந்திய மக்கள் காலம் காலமாக சேர்த்து வைத்திருக்கும் 5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான 30000 டன் தங்கத்தை சந்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக மத்திய அரசு கோல்ட் மானிடைசேஷன் 2.0 திட்டத்தை மிகவும் பயனுள்ள வகையிலும் மிகவும் பிரம்மாண்டமாகவும், மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் திட்டமிட்டு வருகிறது.
இந்த புதிய கோல்ட் மானிடைசேஷன் திட்டம் என்பது புதியது இல்லை என்றாலும், முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் பயனுள்ளதாக இல்லை, இதனால் மக்கள் மத்தியில் பிரபலமடையாமல் 100 டன்னுக்கும் குறைவான தங்கத்தையே மக்களிடம் ஈர்த்தது. இதை சரி செய்து, இந்திய மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெறும் வகையில் நகை கடைகளை இணைத்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் இறக்குமதி செய்வது மூலம் அதிகளவிலான அன்னிய செலாவணி இருப்பு மாயமாகிறது. இந்தியா ஒரு ஆண்டுக்கு 700 முதல் 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. 2026ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 71 பில்லியன் டாலர் அளவிலான டாலர் இருப்பை தங்க இறக்குமதிக்காக செலவிடப்பட்டு உள்ளது. இதை தடுக்கும் இதேவேளையில் மக்கள் மத்தியில் நிலவும் தங்கத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோல்ட் மானிடைசேஷன் 2.0 திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
2.0 திட்டத்தின் விதிகளுக்கும், செயல்முறைகளுக்கும் கிட்டத்தட்ட அனைத்தும் ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், ஒரிரு இடத்தில் இருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்க வேண்டியுள்ளது என ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி கவுன்சில் அமைப்பின் தலைவர் ராஜேஷ் தெரிவித்தார்.
2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்கள் கையில் இருக்கும் தங்கத்தை நிதியியல் சந்தைக்கு வரும், இதை நகை கடைகள் உற்பத்தி பொருளாக பயன்படுத்தி நகைகளை மீண்டும் சந்தையில் மக்களுக்கு விற்கும். இதன் மூலம் தங்க இறக்குமதி மற்றும் நகை வர்த்தகத்தில் புதிய சர்குலர் எக்னாமி உருவாகும்.
புதிய கோல்ட் மானிடைசேஷன் 2.0 திட்டத்தில் மக்களிடம் பெறப்படும் தங்கத்திற்கு கூடுதலாக 1 சதவீத லாபம் நகை கடைகள் பெறும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதால் நகை கடைகள் மத்தியில் இத்திட்டம் பெரிய அளவில் ஆர்வம் இருந்து வருகிறது.
1.0 மற்றும் 2.0 திட்டத்தில் என்ன வித்தியாசம்..?
2015ல் மத்திய அரசு கோல்ட் மானிடைசேஷன் திட்டத்தை அறிவிக்கும் போது மக்கள் தங்களிடம் இருக்கும் தங்க நகைகளை வங்கியில் கொடுத்து அதை உருக்கி, தரத்தை ஆய்வg செய்து அன்றைய நாளில் 24 கேரட் தங்கம் விலைக்கு கணக்கிட்டு, தங்கத்தை எடை கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதற்கு வங்கிகள் நீண்ட கால வைப்பு நிதி என்றால் 2.50 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தை கொடுக்கும்.
அதாவது உங்களிடம் 10 கிராம் தங்க நகை இருந்தால், அதை உருக்கி தங்கத்தின் தூய்மையை ஆய்வு செய்து, அதை 24 கேரட் தங்கமாக கணக்கிட்டு, உங்களுக்கான தங்க டெப்பாசிட் கணக்கில் கிராம் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இக்கணக்கில் இருக்கும் தங்கத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம். திரும்ப பெறும்போது வங்கி விதிகள் படி தங்கமாகவோ அல்லது பணமாகவோ பெறலாம்.
இத்திட்டத்தில் நகை வாங்கும் போது செய்கூலி, சேதாரத்திற்கு கொடுக்கப்பட்ட தொகையை மக்கள் இழப்பார்கள். ஆனால் 24 கேரட் தங்கத்தை வைப்பு செய்யும் போது எவ்விதமான இழப்பும் ஏற்படாது.
இத்திட்டம் மக்கள் மத்தியில் பிரபலமாகாமல் நாடு முழுவதும் வெறும் 5700 டெப்பாசிட்டர்களை மட்டுமே பெற்று வெறும் 31 டன் தங்கத்தை மட்டுமே பெற்றது மத்திய அரசு.
இத்திட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய பலனே 10-12 வருடத்திற்கு பின்பு தங்கத்தை திரும்ப பெறும் போது இத்திட்டத்தில் பெறப்படும் வட்டி வருமானத்திற்கும், தங்கம் விலை உயர்வு மூலம் கிடைக்கும் லாபத்திற்கும் வருமான வரியோ அல்லது கேப்பிடல் கென்ஸ் வரியோ இருக்காது.
இந்த நிலையில் 2.0 திட்டத்தில் வங்கிகளுடன், நகை கடைகளும் மக்களிடம் தங்கத்தை வாங்கி வைக்கும் பொறுப்பை கொடுத்தால் மக்கள் மத்தியில் கூடுதல் பிரபலம் அடையும் என அரசு நம்புகிறது.


Click it and Unblock the Notifications