தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான இன்று ஏறுமுகத்துடன் துவங்கியது மட்டும் அல்லாமல் சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய அளவீடான 4400 டாலரை நெருங்கி வருவதால் முதலீட்டு சந்தையில் புதிய தடுமாற்றமும், பதற்றமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 0.4 சதவீதம் உயர்ந்து 4,398.09 டாலர் அளவில் வர்த்தகமாகி வருகிறது. இது 21 நாள், 50 நாள் simple moving average விலையை கடந்து 100 SMA விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் தங்கம் விலை உயர்வுக்கு சரியான அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது என்பதை விலை மாற்றம் காட்டுகிறது.

சர்வதேச சந்தை விலை பிரதிபலிக்கும் வகையில் இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 53 ரூபாய் உயர்ந்து 15,566 ரூபாய்க்கும், 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் உயர்ந்து 14,270 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் விலை 530 ரூபாய் உயர்ந்து 1,55,660 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 255 ரூபாய் விலையில் வர்த்ககமாகி வருகிறது. இதன் வாயிலாக வெள்ளி விலை ஒரு கிலோ 2,55,000 ரூபாயாக உள்ளது.
ஈரான் போர் துவங்கியதில் இருந்து டாலர் ஆதிக்கம், பணவீக்கம் அச்சம் என அடுத்தடுத்து முதலீட்டு சந்தை புரட்டிப்போடும் வகையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிரடியாக வட்டி விகிதத்தை உயர்த்தும் என கணிக்கப்பட்டது. ஆனால் இதை உடைக்கும் வண்ணம் அடுத்தடுத்து தகவல் வெளியாகி செப்டம்பர் கூட்டத்தில் வட்டி விகித உயர்வுக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகிய காரணத்தால் தங்கம் விலை மீண்டும் உயர துவங்கியுள்ளது.
கடந்த வார வர்த்தக முடிவில் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்களில் தங்கம் விலை சர்வதேச ஸ்பாட் சந்தையில் குறைந்து 4300 டாலருக்கு வந்தது. இதை தொடர்ந்து அமெரிக்க சந்தையில் மக்களின் நுகர்வின் அளவும், ரீடைல் விற்பனையும் குறைந்துள்ளதாக வெளியான தரவுகள் அடுத்த பெட் கூட்டத்தில் வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.
இதன் விளைவாக இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 4400 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேவேளையில் டாலர் மதிப்பு 0.2 சதவீதம் குறைந்துள்ளது, இதுவும் முதலீட்டு சந்தையில் தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது, இதை விட முக்கியமாக அமெரிக்க பத்திர முதலீட்டின் மீதான லாபமும் குறைந்து வருகிறது. இது அனைத்தும் தான் இன்று தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
பெட் வங்கியின் வட்டி விகித உயர்வின் அச்சத்தில் இருந்து முதலீட்டு சந்தை விடுப்பட்டாலும், கச்சா எண்ணெய் சப்ளை தாக்கம், அதன் மூலம் ஏற்படும் பணவீக்க பாதிப்புகள் தொடர்பான அச்சம் இன்னமும் இருக்கிறது. இதேவேளையில் அமெரிக்க அரசு ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.
அதேபோல் ஈரான் ராணுவம் ஹார்முஸ் வழித்தடத்தில் அனுமதி இல்லாமல் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்களை கடந்த வாரத்தில் பெரிய அளவில் உயர்த்தியுள்ளது. இவை அனைத்தும் அடுத்தக்கட்ட போர் தாக்குதலுக்கான ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படும் வேளையிலும் தங்கம் முக்கியமான முதலீடாக மாறி வருகிறது.
முதலீட்டு சந்தையில் தற்போது டாலர் மதிப்பு குறைவு, அமெரிக்க அரசு பத்திர முதலீட்டின் லாபம் சரிவு ஆகியவை முதலீட்டு சந்தையை தங்கம் மீது திருப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications

