தற்போது உலகிலேயே நல்ல வருமானத்தைக் கொடுக்கும் பாரம்பரிய சொத்துக்களில், தங்கம் சிறப்பாக செயல்படுவதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
அதே போல, சமீபத்தில் ஆர்பிஐ வங்கி, தங்கத்தின் மதிப்புக்கு 90 % வரை கடன் கொடுக்கலாம் எனச் சொன்ன செய்தியை படித்து இருப்பீர்கள்.
இவை எல்லாம் நமக்குச் சொல்வது என்ன? தங்கத்தின் விலை ஏற்றம் சிறப்பாக இருக்கிறது என்பதைத் தான். சரி இன்று தங்கம் விலை எப்படி இருக்கிறது? எதிர்காலத்தில் என்ன ஆகும்? வாருங்கள் பார்ப்போம்.
சரிவில் MCX தங்கம்
10 கிராம் தங்கத்துக்கான அக்டோபர் 2020 காண்டிராக்டின் விலை கடந்த 6 ஆகஸ்ட் 2020 அன்று 55,845 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அடுத்த நாளே (7 ஆகஸ்ட் 2020) இண்ட்ரா டேவில் 56,191 ரூபாய் வரை தொட்டது. ஆனால் வர்த்தக நேர முடிவில் 54,789 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அதே போல நேற்றும் (10 ஆகஸ்ட் 2020) 54,946 ரூபாய்க்கே வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று (11 ஆகஸ்ட் 2020) அதே அக்டோபர் 2020 மாதத்துக்கான தங்க ஃப்யூச்சர்ஸின் விலை 54,440 ரூபாய் வரை சரிந்து இருக்கிறது.
வெள்ளிக்கும் அதே கதி தான்
இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வர்த்தகமாகும், செப்டம்பர் 2020-க்கான, 1 கிலோ வெள்ளி காண்டிராக்டின் விலை இன்று குறைந்தபட்சமாக 74,320 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. வெள்ளி விலையும் தன் உச்ச விலையான 77,949 ரூபாயில் இருந்து வீழ்ச்சி கண்டு வருகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
சர்வதேச தங்கம் விலை
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, கடந்த 06 ஆகஸ்ட் 2020 அன்று, நம்மை எல்லாம் அலற வைக்கும் விதத்தில் 2,063 டாலரைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. அடுத்தடுத்த நாட்களில் தடாலென விலை சரிந்து, இன்றைக்கு 2,000 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இப்படி தொடர்ந்து சர்வதேச தங்கம் விலை 3-வது நாளாக சரிவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
இப்படி சர்வதேச தங்கம் விலை & எம் சி எக்ஸ் தங்கம் விலை எல்லாம் வீழ்ச்சி காணும் போது, சென்னை ஆபரணத் தங்கம் விலையும் வீழ்ச்சி காணத் தானே செய்யும். சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 58,470-க்கும், 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை நேற்று 53,580 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.
தங்கம் விலை சரிவு
கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை 59,130 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை 54,200 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். இந்த விலை உச்சத்தில் இருந்து தான், நேற்று 24 கேரட் 10 கி தங்கம் 58,470 ரூபாய்க்கும், 22 கேரட் 10 கி தங்கம் 53,580 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கின்றன. இந்த விலை சரிவுக்கு காரணம் என்ன?
வலுபெறும் டாலர்
அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் 0.1 % ஏற்றம் கண்டு இருக்கிறது. டாலர் பலமடைகிறது என்றால், மற்ற நாட்டு கரன்ஸிகளின் மதிப்பு குறைகிறது என்று பொருள். மற்ற நாட்டு கரன்ஸி வழியாக சர்வதேச தங்கத்தை வாங்கும் போது கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். எனவே தங்கத்தின் மீதான முதலீடுகள் குறையலாம். முதலீடுகள் குறைந்தால் டிமாண்ட் குறைந்து விலை குறையலாம்.
டாலர் VS தங்கம் உறவு
எப்போது எல்லாம் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிக்கிறதோ அப்போது எல்லாம் தங்கத்தின் விலை குறையும். எனவே தொடர்ந்து டாலர் பலமடைந்தால் தங்கம் அடி வாங்கும் என்று புரிந்து கொள்ளலாம். எனவே தங்கத்தில் புதிதாக முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக பொசிஷன் எடுக்குமாறு எச்சரிக்கிறது கோட்டக் செக்யூரிட்டிஸ்.
தங்க விலை கணிப்புகள்
தங்கத்தின் விலை இப்போதைக்கு ஒரு சின்ன இறக்கத்தைக் கண்டாலும், அடுத்தடுத்த மாதங்களில் ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் காணும் என எதிர்பார்க்கலாம். கோல்ட் மேன் சாக்ஸ், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, அடுத்த 12 மாதங்களுக்குள் 2,300 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. இதே போல பல தரகு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கம் விலை அதிகரிக்கும் எனக் கணித்து இருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
உலக பொருளாதாரம்
கொரோனா வைரஸ் பிரச்சனையால், இன்னும் பல துறைகள் சரியாக இயங்க முடியவில்லை. உதாரணம் ரயில்வே, விமான சேவை, ஆட்டோமொபைல்... என்று பட்டியல் போடலாம். இதனால் உலக பொருளாதாரமே ஒரு தேக்கத்தில் நிற்கிறது. பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பல நாடுகள் ஊக்கத் தொகை திட்டங்களை அறிவித்துக் கொண்டு இருக்கின்றன.
முதலீட்டாளர்கள் மன நிலை
தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி முதல் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். மேலே சொன்னது போல பல நாட்டு அரசாங்கங்கள், ஊக்கத் தொகை வழியாக பணத்தை வெளியிட்டால், பணவீக்கம் அதிகரிக்கும். அது தங்கத்தின் விலையை மேலும் அதிகரிக்க உதவும் என நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
அமெரிக்கா சீனா பஞ்சாயத்து
2018-ல் வர்த்தகப் போரில் தொடங்கிய அமெரிக்க சீன பஞ்சாயத்து இன்று வரை தொடர்ந்து கொண்டே போகிறது. உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு மத்தியில் நடக்கும் பஞ்சாயத்தால் மறைமுகமாக பல நாடுகளையும் பாதிக்கப்படுகின்றன. இது தங்கத்தின் விலையை அதிகரிக்க உதவும் ஒரு காரணியாக இருக்கிறது. எனவே தங்கம் மேலும் விலை அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கின்றன.