சில காலமாக தங்கத்தின் போக்கை கணிக்கவே முடியாத சூழல் நிலவி வருகிறது. ஒரு நாள் பார்த்தால் விலை கிடு கிடுவென அதிகரிக்கிறது. மறுநாள் பார்த்தால் அப்படியே சர்ரென குறைகிறது. இப்படி விலை ஏற்றம் இறக்கமாகத்தான் இருந்து வருகிறது. இன்று ஒரு நாளில் தங்கம் விலை சவரனுக்கு 616 ரூபாய் குறைந்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 1,92,991 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. அதிலிருந்து இன்று வரையில் ரூ.49,400 குறைந்து, ரூ. 1,43,610-க்கு வர்த்தகமாகிறது.
தங்கம் தனது வரலாற்று உச்சத்தில் இருந்து சுமார் 26 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் இனியும் விலை குறையுமா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர். அதிலும் இந்திய மக்கள் விலை குறைவின் காரணமாக தாங்கள் வைத்திருக்கும் பிசிக்கல் கோல்டை விற்பனை செய்ய தொடங்கியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட புவிசார அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் மக்கள் மட்டுமல்ல.. மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிகமாக வாங்கின. அதன் பிறகு மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பற்ற போர் பதற்றம் காரணமாக தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்தது. இதற்கு மற்றொரு காரணம் அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடைந்ததால் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக முதலீட்டாளர்கள் கருதினர். ஆனால் இப்போது இந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் எந்த ஒரு மாற்றம் நடந்தாலும் அது உலக நாடுகளை பாதிக்கும். அந்த வகையில் அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்காமல் வைத்திருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே முதலீட்டாளர்கள் தங்களுக்கு வட்டி வழங்கும் அரசு பத்திரங்கள் பக்கம் திரும்புவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஃபெடரல் ரிசர்வ் மூன்று முறை வட்டி விகிதங்களை உயர்த்தும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் மற்றொரு வட்டி விகித உயர்வு இருக்கும் வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் போர் பதற்றம் அதிகரித்தால் அப்போது தங்கத்தின் விலை அதிகரிக்கும் தானே! மாறாக இந்த முறை விலை குறைந்திருக்கிறதே என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த முறை சந்தையின் கவனம் போர் பதற்றத்தை விட அதனால் ஏற்படும் பணவீக்கத்தில் தான் இருக்கிறது.
போர் பதற்றத்தின் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இந்த வழியாகத்தான் கச்சா எண்ணெய், எல்பிஜி போன்ற பொருட்கள் உலக நாடுகளை வந்தடைகின்றன. கச்சா எண்ணெயின் சப்ளை பாதித்ததால் விலை கிடு கிடுவென அதிகரித்தது. இதனால் பணவீக்கம் உயரக்கூடும் என்ற அச்சமும் ஒருபுறம் முதலீட்டாளர்களை குழப்பமடைய செய்தது.
பணவீக்கம் அதிகரித்தால் கண்டிப்பாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்காமல் வைத்திருக்கும். எனவே முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்றுவிட்டு வட்டி தரும் அரசு பத்திரங்கள் மற்றும் பிற திட்டங்களின் பக்கம் திரும்புவார்கள். இதுவும் தங்கத்தின் விலைக்கு ஒரு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. இப்படி பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. இந்த விலை வீழ்ச்சி இனிவரும் நாட்களிலும் தொடருமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
