சர்வதேச முதலீட்டுச் சந்தை தற்போதும் பெரும் குழப்பத்திலும், தயக்கத்திலும் உள்ளது என்றால் மிகையில்லை, அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுகளை எதிர்பார்த்து ஆசிய சந்தை முழுவதும் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை நேற்றைய வர்த்தகத்தில் மந்தமான வர்த்தகத்துடன் துவங்கினாலும், 366 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் முடிவடைந்தது.
இதேவேளையில் காலை முதல் மாலை வரையில் மந்தமாக இருந்த தங்க முதலீட்டுச் சந்தை அமெரிக்கச் சந்தையின் வர்த்தகம் துவங்கிய பின்னர் எம்சிஎக்ஸ் சந்தையில் உயரத் துவங்கியுள்ளது.
அமெரிக்கப் பெடர்ல் வங்கி
அமெரிக்கப் பெடர்ல் வங்கியின் 2 நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை துவங்கியள்ள நிலையில் நாளை இதன் முடிவுகள் வெளியாக உள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதன் எதிரொலியாகக் கடந்த 2 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒமிக்ரான் தொற்று
இதேவேளையில் சர்வதேச நாணய நிதியம் ஒமிக்ரான் தொற்றுக் காரணமாகச் சர்வதேச பொருளாதார வளர்ச்சியை 0.5 சதவீதம் குறைத்து 4.4 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஐஎம்எப் அமைப்பு அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கணிப்பையும் குறைத்துள்ளது.
ரஷ்யா உக்ரைன்
இதேவேளையில் ரஷ்யா உக்ரைன் நாட்டில் தனது ராணுவத்துடன் நுழைந்தால், ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் மீது பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தடை விதிக்கத் திட்டமிட்டு உள்ளது. இதனால் சர்வதேச முதலீடு சந்தையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தங்கம் விலை
இந்தக் காரணங்களால் நேற்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1838 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 1850 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் பாதிப்பு இந்தியச் சந்தையிலும் எதிரொலித்த காரணத்தால் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.57 சதவீதம் அதிகரித்து 48,841.00 ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில் தற்போது அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி உயர்வு குறித்தும், பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் குறித்து முடிவு எடுக்கும் பட்சத்தில் தங்கம் விலையில் பெரிய அளவிலான உயர்வு ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது. இதேவேளையில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையும் தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.