தங்கம் செல்வத்தின் அடையாளம். இந்தியாவில் ஒரு சாமானியரை அழைத்து, 50 லட்சம் ரூபாய் பணம் வேண்டுமா அல்லது ஒரு கிலோ தங்கம் வேண்டுமா? எனக் கேட்டால் பெரும்பாலும். நகையைத் தான் தேர்வு செய்வார்கள்.
அட தங்கத்தை வாங்கும் போது செய் கூலி சேதாரம் எல்லாம் இருக்குமே, அதை எல்லாம் கணக்கிட்டால் பணம் தானே லாபம் என்று கணக்கு போட்டு பணம் கேட்பவர்கள் குறைவு தான்.
அந்த அளவுக்கு நம் நாட்டில் தங்க மோகம் அதிகம். சரி Gold விலை நிலவரத்துக்கு வருவோம்.
8 வருட உச்சம்
கடந்த வாரத்தில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சர்வதேச அளவில், கடந்த எட்டு வருடங்களில் இல்லாத உச்சமாக 1,771 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. இன்றும் 1,771 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று அதிகபட்சமாக 1,775 டாலர் வரைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலை
இந்தியாவின் கமாடிட்டி சந்தையான, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை கடந்த வாரத்தில் 48,589 ரூபாய்க்கு வர்த்தகமானது. இன்று 48,405 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இங்கும் விலை ஏற்றம் உறுதி ஆகிவிட்டது.
ஆபரணத் தங்கம் விலை 24 கேரட்
நம் சிங்காரச் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தை, நேற்று மீண்டும் வரலாற்று உச்சமாக 50,620 ருபாய்க்கு விற்று இருக்கிறார்கள். ஆக கிராமுக்கு 5,062 ரூபாய் மேனிக்கு, ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தை 40,496 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.
22 கேரட் தங்கம் விலை
சென்னை மாநகரத்தில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 46,410 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. ஆக 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை 4,641 ரூபாய் மேனிக்கு 37,128 விற்று இருக்கிறார்கள். ஆக, சர்வதேச தங்கம் விலையைத் தொடர்ந்து, ஆபரணத் தங்கமும் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. ஏன் இப்படி தங்கம் விலை பயங்கரமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..? வாருங்கள் ஒவ்வொரு காரணமாகப் பார்ப்போம்.
காரணம் 1 கொரோனா
உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி பேரைத் தாண்டி விட்டது. இன்னும் பல நாடுகளில் கொரோனா முதல் அலையே ஓயவில்லை. அதற்குள் சீனா போன்ற நாடுகளில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அடிக்கத் தொடங்கிவிட்டது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பயத்தில் தங்கம் விலை எகிறிக் கொண்டு இருக்கிறது.
காரணம் 2 பொருளாதாரம்
உலக அளவில் பல நாட்டுப் பொருளாதாரங்களும் வழக்கம் போல செயல்படுவதே சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. இது தங்கத்துக்கு சாதகமாக அமைந்து கொண்டு இருக்கிறது. தங்கம் பாதுகாப்பான முதலீடு என்கிற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்கம் விலையும் ஓஹோவென விண்ணைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது.
காரணம் 3 வட்டி விகிதம்
உலக அளவில், பெரும்பாலான நாடுகளில், வங்கிகளில் டெபாசிட்டுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கிறது. வட்டி வருமானம் கொடுக்கும் முதலீடுகள் எப்போது எல்லாம் டல்லடிக்கிறதோ அப்போது எல்லாம், தங்கம் டாப் கியரில் விலை ஏறும். அதுவும் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.
காரணம் 4 நாடுகளுக்குள் பிரச்சனைகள்
மேலே சொன்னவைகள் போக, அமெரிக்கா - சீனா பிரச்சனை, இந்தியா - சீனா பிரச்சனை என உலகம் முழுக்கவே ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவிக் கொண்டு இருக்கிறது. இதுவும் தங்கத்தின் விலை ஏற முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு காரணம் இருந்தாலே எகிறி அடிக்கும் தங்கம், இப்போது இத்தனை காரணங்கள் இருக்கும் போது விலை ஏறாதா என்ன? அதான் சிறப்பாக விலை ஏறிக் கொண்டு இருக்கிறது.
கணிப்பு கோல்ட் மேன் சாக்ஸ்
உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மேன் சாக்ஸ், அடுத்த 6 மாத காலத்துக்குள் தங்கம் விலை 1,900 டாலரைத் தொடும் எனக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல 12 மாத காலத்துக்குள், தங்கம் விலை 2,000 டாலரைத் தொடலாம் எனக் கணித்து இருந்ததும் நினைவு கூறத்தக்கது. ஆக தங்க வேட்டை காத்திருக்கிறது.