6 மாதங்களுக்கு முன்பு வரை விலை உயர்வால் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்த தங்கம், தற்போது விலை வீழ்ச்சியால் தலைப்பு செய்தியாகியுள்ளது. தங்கம் விலை எதிர்பாராத வகையில் வேகமாக விலை குறைந்து வருகிறது.
முதலீட்டாளர்களின் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம், உலக சந்தையில் கடந்த மூன்று மாதங்களில் மிகப்பெரிய விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தங்கம் மோசமான காலாண்டு சரிவை பதிவு செய்துள்ளதால், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 3,978 டாலராக வர்த்தகமாகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் உலக சந்தையில் தங்கம் விலை 11.2% குறைந்துள்ளது, கடந்த நவம்பர் மாதத்திற்கு பின் 4000 டாலருக்கு கீழ் இந்த மாதம் தங்கம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக இந்த ஜூன் காலாண்டில் தான் தங்கம் விலை இறக்கத்தை பதிவு செய்துள்ளது. இது 2013ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டிற்கு பிறகு அதாவது 13 ஆண்டுகளில் இல்லாத ஒரு சரிவு என்கின்றனர் நிபுணர்கள்.
தங்கத்தின் விலை சரிவுக்கு பின்னணியில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் எடுத்துள்ள முடிவுகள் மிக முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள். இதனை நிதி சந்தையில் Hawkish நிலைப்பாடு என அழைக்கின்றனர். அதாவது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகமாக உயர்த்துவது அல்லது நீண்ட காலத்திற்கு வட்டி விகிதங்களை உயர்ந்த நிலையிலேயே வைத்திருப்பது ஆகும்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் ஒரு முறையாவது வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற கணிப்பால் முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் தரும் முதலீடுகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் தங்கம் வாங்க ஆளில்லாமல் டிமாண்ட் குறைந்து விலையும் குறைகிறது.
அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விட, அமெரிக்க அரசுப் பத்திரங்கள் மற்றும் டாலரில் முதலீடு செய்வதையே லாபகரமானதாக கருதுகின்றனர். வட்டி விகித உயர்வு சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பை வலுப்படுத்துகிறது. தங்கம் டாலர் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படுவதால், டாலர் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறைகிறது.
இந்த சரிவு நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்பட்டாலும், குறுகிய கால வர்த்தகர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் பணவீக்க தரவுகள், வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்த்தவும் இல்லாமல் குறைக்கவும் இல்லாமல் தற்போதுள்ள அளவிலேயே நீடித்தால் தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான விலை மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கத்துடனே இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.இதற்கிடையே ஜூலை 1ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,04,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தங்கம் விலை சவரனுக்கு வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து 29,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

