தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அளவிலான மாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை சந்தை முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஈர்க்காத காரணத்தால் தங்கம் மீது தொடர்ந்து அதிகளவில் முதலீடு செய்யத் தயாராகியுள்ளனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், சர்வதேச சந்தைகளின் தாக்கத்தை விடவும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
இந்நிலையில் தங்கம் மற்றும் தங்கம் மீதான வர்த்தகத்தின் தற்போதைய சூழ்நிலை என்ன..? தங்கம் விலை தொடர்ந்து குறையுமா..? தங்கத்தில் தற்போது முதலீடு செய்யலாமா எனப் பல கேள்விகளுக்கான பதில் இப்போது பார்க்கப்போகிறோம்.
வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை சூழ்நிலை
சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை மற்றும் மோசமான பங்குச்சந்தை சூழ்நிலையின் காரணமாக மும்பை ரீடைல் சந்தையில் 24 கேர்ட் தங்கம் 407 ரூபாய் அதிகரித்து 10 கிராம் தங்கம் 49,393 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பின் வலிமையான நிலையின் காரணமாகத் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
MCX சந்தை நிலவரம்
MCX சந்தையின் பியூச்சர் வர்த்தகச் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் 0.99 சதவீதம் அதிகரித்து 49,106 ரூபாய் வரையில் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாமானிய மக்களின் தங்கம் வாங்கும் முடிவில் பின்வாங்க வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது. இதேபோல் தங்கம் மீது முதலீடு செய்வோர் மத்திய பட்ஜெட் அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை
இன்று சென்னை ரீடைல் சந்தையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 4,655 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 37,240 ரூபாய்க்கும், 10 கிராம் தங்கம் 46,550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ரீடைல் தங்கம் விலை மாநில அளவிலும் கணிசமாக மாறுபட வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலை MCX சந்தையின் பியூச்சர் வர்த்தகச் சந்தையில் 3.21 சதவீத வளர்ச்சி அடைந்து 69,765 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஒருகிலோ வெள்ளி விலை 70,000 ரூபாயை தாண்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு
கடந்த 5 நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.14 ரூபாயில் இருந்து 72.86 ரூபாய் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவில் கட்டுப்படுத்தப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கட்டுப்படுத்தியதற்கும் ரூபாய் மதிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ஆய்வறிக்கை
வெள்ளிக்கிழமை வெளியான பொருளாதார ஆய்வறிக்கை முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய அரசு கடந்த 2 வருடமாக நாட்டின் வளர்ச்சிக்காகச் செலவிட்ட தொகையைக் கண்டு இந்த வருடம் பட்ஜெட் அறிக்கையில் பெரிய அளவிலான அறிவிப்பு எதுவும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இதன் வாயிலாகக் கடந்த ஒரு வாரமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்றி வரும் நிலையில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பெரிய அளவிலான சரிவை அடைந்து வருகிறது.
24 கேரட் தங்கம் விலை
பங்குச்சந்தையில் இருந்து வெளியேறும் முதலீடுகள் அதிகளவில் தங்கம் மீது முதலீடு செய்யப்பட்டு வரும் காரணத்தால் தங்கம் விலை விலை தொடர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாகவே தற்போது 24 கேரட் தங்கம் விலை 49,000 ரூபாயை தாண்டியுள்ளது.
சவரின் கோல்டு பாண்டு திட்டம்
இதேவேளையில் மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பில் அரசின் தங்க முதலீட்டுப் பத்திரங்களான சவரின் கோல்டு பாண்டு திட்டத்திற்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,912 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த விலையைக் கடந்த 3 நாட்களில் India Bullion and Jewellers Association Ltd (IBJA) அமைப்பின் 999 தூய்மையான தங்க அளவீட்டை மையமாக வைத்து நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தங்க பத்திர முதலீடு
மேலும் சவ்ரின் கோல்டு பாண்டு திட்டத்தின் 2020-21- சீரியஸ் XI பத்திரத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 05 வரையில் முதலீடு செய்யலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசு பத்திர முதலீட்டுத் திட்டமான சவரின் கோல்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
49,000 ரூபாய் அளவீட்டில்
ரிசர்வ் வங்கி தனது பத்திர முதலீட்டுத் திட்டத்திற்குத் தங்கம் மீதான விலையை நிர்ணயம் செய்துள்ள நிலையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 49,000 ரூபாய் அளவீட்டில் இருந்து குறையச் சில மாதங்கள் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சவ்ரின் கோல்டு பாண்டு திட்டத்தின் 2020-21- சீரியஸ் X பத்திர முதலீட்டுதிட்டம் ஜனவரி 11 முதல் 15 வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரு கிராம் 5,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.