இந்தியாவில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும், குறைந்தாலும் இதை வாங்க எப்போதும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கும். அந்த அளவிற்குத் தங்கமும் மக்களின் வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டி பிணைந்துள்ளது என்று கூறலாம்.
2020ல் தங்கம் விலையில் ஏற்பட்ட தடாலடி உயர்வு, தங்கம் மீதான முதலீட்டில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையில்லை.
தங்கம் விலை சரிவு
இந்தச் சூழ்நிலையில் தங்கம் மீண்டும் மக்கள் மத்தியில் முக்கிய முதலீடாக மாறும் நிலை வந்துவிட்டது. சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை, கொரோனா தொற்று மற்றும் தடுப்பு மருந்து, நாணய மதிப்பு குறிப்பாக ரூபாய் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை எனப் பல்வேறு காரணங்களால் தங்கம் விலை குறையத் துவங்கியுள்ளது.
முதலீட்டு வல்லுனர்களின் கணிப்பு
குறிப்பாகச் சர்வதேசச் சந்தைகள் முதலீட்டு வல்லுனர்களின் கணிப்புகளின் படி, தங்கம் 49,000 ரூபாய் அளவில் வரும் போது வாங்கினால் சிறப்பான லாபத்தைப் பார்க்கலாம் எனக் கணித்துள்ளனர்.
இந்தச் சிறப்பான வர்த்தகச் சூழ்நிலை தான் தற்போது உருவாகியுள்ளது.
2வது நாளாகச் சரிவு
தங்கம் விலை 2வது நாளாக இந்திய சந்தையில் சரிவு அடைந்துள்ளது. இதனால் மக்கள் தங்க நகைகளை வாங்க முடிவு செய்த காரணத்தால் நகைக் கடைகளில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாகப் பொங்கல் பண்டிகை காலத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்து இருக்கும் மக்கள் தங்கத்தை வாங்கத் திட்டமிட்டு உள்ள காரணத்தால் இந்த சரிவும் மக்களுக்கும் பெரும் லாபத்தைத் தரும்.
MCX சந்தை விலை
இந்திய சந்தையின் MCX குறியீட்டில் 10 கிராம் தங்கத்தின் விலை 0.2 சதவீதம் சரிந்து 49,122 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது, நேற்று இதன் விலை 0.3 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 0.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று சரிவடைந்து முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை அளித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 0.8 சதவீதம் வரையில் சரிந்து 66,150 ரூபாயாக உள்ளது.
அமெரிக்கப் பத்திர சந்தை
இந்தியாவில் கடந்த ஒரு வாரக் காலமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகளவிலான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்டுள்ள லாப வளர்ச்சி தான். சர்வதேச சந்தையில் மிகவும் மந்தமான சூழ்நிலை நிலவி வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் நிலையான முதலீட்டைத் தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது.
முதலீட்டாளர்கள் மன மாற்றம்
இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்துள்ளவர்கள் அதிகளவில் விற்பனை செய்துவிட்டு பத்திர சந்தைக்குச் சென்றுள்ளனர். இதனால் நாணய சந்தையில் டிமாண்ட் குறைந்துள்ளது.
இதனால் பங்குச்சந்தையில் இருந்தும் முதலீடுகள் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பு வளர்ச்சி
இதோடு டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால், தங்கம் மீது முதலீடு செய்யும் இந்திய முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதன் எதிரொலியாகக் கடந்த 3 நாட்களாக ரூபாய் மதிப்பு தொடர் உயர்வை அடைந்து 74.38 ரூபாயில் இருந்து 73 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
ஸ்பாட் கோல்டு விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 0.2 சதவீதம் உயர்ந்து 1,850.36 டாலராகவும், வெள்ளி விலை 0.5 சதவீதம் உயர்ந்து 25.65 டாலருக்கும் உயர்ந்துள்ளது. ஆனால் டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இந்தியாவில் தங்கம் விலை சரிய அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரம்
அமெரிக்காவில் ஜோ பிடன் தலைமையிலான அரசு அமையப் போகும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஊக்குவிப்புத் திட்டம் ஒப்புதல் பெற்று அமலாக்கம் செய்யப்பட உள்ளது. இதையடுத்து சில நாட்களில் புதிய ஆட்சி அமையும் காரணத்தால் முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.