கிரிப்டோ கரன்சி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது உலகின் பல நாடுகளும் அனுமதித்து வருகின்றன. இதனால் கிரிப்டோ கரன்சியில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. ஆக முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக் கொள்வது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை பாதிக்க கூடும் என்று ஜேபி மார்கன் சேஸ் அண்ட் கோ தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே, தங்கத்தில் இருந்து பணம் வெளியே எடுக்கப்பட்டு வருவதாகவும், பிட்காயின்களில் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன.
அதோடு முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சியின் நீண்ட கால நோக்கில் முதலீடுகளை அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவிலும் அனுமதி
கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி முன்பு தடை விதித்திருந்த நிலையில், இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் சட்டவிரோதமாக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் அந்த தடையை நீக்கி, இந்தியாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தினை செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது
சமீபத்திய காலங்களில் இந்த பிட்காயின் வர்த்தகம் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இதன் மூலம் முதலீட்டாளர்களும் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் நிபுணர்கள் இந்த பிட்காயின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும். இது 2030ல் 1 கோடி ரூபாயினை எட்டும் என்றும் கணித்துள்ளனர். ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல ஆப்சன் என்றும் கூறியுள்ளனர்.
பிட்காயின் ஒரு சிறந்த முதலீடு
பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்தும் ஒரு முறையாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் சேமிக்கலாம். மற்ற முதலீடுகள் பல்வேறு காரணிகளை சார்ந்து இருப்பதால் அவைகள் ஒரு சீரற்ற முறையில் உள்ளன. ஆனால் பிட்காயின் வர்த்தகம் இந்த நெருக்கடியான நேரத்தில் கூட பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இது தேவையை பொறுத்தே வர்த்தகமாகிறது. இதன் காரணமாக இதன் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பிட்காயின் இலக்கு
ஆக வல்லுனர்கள் நீண்ட கால முதலீட்டிற்கு இது ஏற்ற ஒரு திட்டம் என்றும் கணித்துள்ளனர். ZebPayவின் தலைமை நிர்வாக அதிகாரி 2030க்குள் பிட்காயின் 1 கோடி ரூபாயினை எளிதில் எட்டலாம் என்று சமீபத்தியில் கூறியிருந்தார். மேலும் பிட்காயினில் முதலீட்டாளர்கள் திட்டமிட்டு முதலீடு செய்யலாம் என்றும் கூறியிருந்தார்.
தங்கம் Vs பிட்காயின்
ஆக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பிட்காயினுக்கு மாற்ற தொடங்கினால், வரும் ஆண்டுகளில் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு இது சிக்கலாக இருக்கும். நிறுவன முதலீட்டாளர்கள் பிட்காயின் முதலீட்டினை தேர்தெடுக்க தொடங்கியுள்ளனர். ஆனால் அதே நேரம் தங்கத்தினையும் முதலீட்டாளர்கள் ஏற்றுக் கொண்டது மேம்பட்டது என ஜேபி மார்கன் தெரிவித்துள்ளது.
பிட்காயின் டிரஸ்ட் வளர்ச்சி
சமீபத்தில் பட்டியலிடப்பட்ட பிரபலமான பிட்கயின் டிரஸ்டான The Grayscale Bitcoin Trust, அக்டோபர் மாதத்தில் இருந்து 2 பில்லியன் டாலர் வருவாயைக் கண்டுள்ளது. இதே அக்டோபர் மாதத்தில் இருந்து தங்கத்தில் 7 பில்லியன் டாலர் வெளியேறியுள்ளது. எனினும் தற்போது குடும்ப சொத்துகளில் வங்கியில் 0.18% மட்டும் தான் பிட்காயின் கணக்கில் உள்ளது. இதே தங்கத்தின் இருப்பு 3.3% உள்ளது.
தங்கம் விலை குறையலாம்
நிபுணர்களின் கணிப்பு படி, பில்லியன் கணக்கான தொகை பிட்காயினுக்கு மாற்றப்படுவதாக எடுத்துக் கொண்டால், வரவிருக்கும் ஆண்டுகளில் தங்கத்தின் கட்டமைப்பு பாதிக்கப்படும் என ஜேபி மார்கன் கூறியுள்ளது. ஒரு வேளை நிபுணர்கள் கூறுவது நிரூபிக்கப்பட்டால், அதாவது தங்கத்தில் இருந்து முதலீடுகள், பிட்காயினுக்கு மாற்றப்பட்டால் தங்கம் வரும் ஆண்டுகளில் பாதிக்கப்படலாம்.