அமெரிக்காவின் 1.9 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், ஆட்சி மாற்றம், டாலர் மதிப்புச் சரிவு, இந்தியாவில் கொரோனா தடுப்பு மருத்து மக்களுக்கு அளிக்கத் துவங்கியுள்ளதன் எதிரொலியாகச் சாமானிய மக்களுக்குச் சாதகமாகத் தங்கம் விலை குறைந்துள்ளது.
அதுவும் 49,000 ரூபாய் என்ற கடினமான இலக்கை உடைத்து பெரிய அளவிலான சரிவை அடைந்துள்ளதால், மக்கள் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாகக் கிரமங்கள், டவுன் பகுதிகளில் இருக்கும் மக்கள் அதிகப்படியான தங்கம் விலை காரணமாக நீண்ட காலம் தங்கம் வாங்காமல் இருந்த நிலையில் இந்தச் சரிவைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு உள்ளனர்.
சாமானிய மக்கள் மகிழ்ச்சி
சாமானிய மக்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து இருந்த தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. குறிப்பாக 49,000 ரூபாய் என்ற நிலையில் இருந்து கீழே சரிந்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தங்கம் வாங்குவதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
லாக்டவுன் மற்றும் கொரோனா தொற்று
2020ல் லாக்டவுன் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சியின் மூலம் உலகளவில் தங்கம் முக்கிய முதலீடாக மாறியது. குறிப்பாகப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் காப்பாற்றிக்கொள்ள அதிகளவிலான முதலீட்டைத் தங்கத்தின் மீது முதலீடு செய்த காரணத்தால் இதன் விலை தொடர்ந்து பல மாதங்களாக உயர்விலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரிய நிம்மதி
இதன் எதிரொலியாகத் தங்கம் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கும் உயர்ந்தது. தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் தங்க நகைகளை வாங்கத் தயக்கம் காட்டி வந்த மக்களுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள விலை சரிவு பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
விலை சரிவு
குறிப்பாக இந்தியக் கலாச்சாரத்தில் திருமணம் போன்ற பல சுப நிகழ்ச்சிகளுக்குத் தங்கத்தை வாங்காமல் தவிர்க்க முடியாது. தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் பெரும் சிக்கலில் சிக்கியிருந்த மக்களுக்குத் தற்போது ஏற்பட்டு உள்ள விலை சரிவு பெரும் மன நிம்மதியை அளித்துள்ளது.
MCX சந்தை வர்த்தகம்
இந்திய நாணய சந்தையில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், MCX சந்தையில் பிப்ரவரி மாத பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 49000 ரூபாய் அளவீட்டைக் கடந்து 48,544 ரூபாய் வரையில் சரிந்தது.
49,000 ரூபாயைக் கடந்தது
வியாழக்கிழமை வர்த்தகத்தில் 49,221 ரூபாய்க்குச் சரிந்த தங்கம் விலை, வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 1.05 சதவீதம் சரிந்து 48,702 ரூபாய் என்ற விலை அளவிற்கு முடிந்தது.
இதனால் தங்கம் விலை பல தடைகளைத் தாண்டி சாமானியர்கள் வாங்கும் அளவிற்குக் குறைந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை 48.544 ரூபாயில் இருந்து 49,327 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் தொடர் சரிவு பாதையில் இருந்ததைப் போலவே வெள்ளியின் விலையும் தொடர் சரிவு பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் வாயிலாக 1 கிலோ வெள்ளியின் விலை 2.55 சதவீதம் சரிந்து 64,980 ரூபாய் என்ற விலைக்கு முடிந்தது. ஆனால் அதிகப்படியாக 3.42 சதவீதம் சரிந்து 64,400 ரூபாய் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசச் சந்தை
இதேபோல் சர்வதேச வர்த்தகச் சந்தையில் தங்கம் விலை ஜனவரி 4ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாகப் புத்தாண்டு துவங்கிய பின்பும் அமெரிக்கா ஆட்சி மாற்றத்திற்குத் தயாரான பின்பும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஜனவரி 4ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,943 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஜனவரி 15ஆம் தேதி வர்த்தக முடிவில் 1,839 டாலர் வரையில் சரிந்துள்ளது.
100 டாலர் சரிவு
இதன் மூலம் சர்வதேச சந்தையில் கடந்த 10 நாட்களாக ஒரு அவுன்ஸ் தங்கம் கிட்டதட்ட 100 டாலர் அளவிற்குச் சரிந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. மேலும்
இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து குறையும் என அழுத்தமாக நம்பப்படுகிறது. சரி தங்கம் விலை சரிய என்ன காரணம் தெரியுமா..? வாங்கப் பார்ப்போம்.
பொருளாதார ஊக்கத் திட்டம்
அமெரிக்காவின் 1.9 டிரில்லியன் டாலர் பொருளாதார ஊக்கத் திட்டம் நாடாளுமன்றத்தில் இறுதிக்கட்ட ஒப்புதல் அடைந்துள்ள நிலையில் விரைவில் செயல்பட உள்ளது. இதன் எதிரொலியாக அமெரிக்காவின் பத்திர முதலீட்டின் லாப
அளவுகள் வளர்ச்சி அடையத் துவங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, தங்கம், கிரிப்டோகரன்சி சந்தைகளில் இருந்து பாதுகாப்பான பத்திர முதலீட்டைத் தேர்வு செய்துள்ளனர்.
ஜோ பிடன் ஆட்சி
இதேபோல் தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்டு டிரம் பதவி விலக உள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் ஜோ பிடன் அதிபராகப் பதவியேற்க உள்ளார். இப்புதிய ஆட்சியில் ஜோ பிடன் பல புதிய மாற்றங்கள் கொண்டு வருவது மட்டும் அல்லாமல் டிரம்ப் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல உத்தரவுகள் மாற வாய்ப்புகள் இருப்பதால் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படத் துவங்கியுள்ளனர்.
டாலர் மதிப்பு
மேலும் அமெரிக்காவின் 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டம் டாலரின் ஆதிக்கத்தைக் குறைத்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு மாத காலத்தில் 74.38 ரூபாயில் இருந்து 73.09 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இது தங்கம் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இந்திய மக்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.