உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்துள்ளன. அவசரகால பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளவும் நாட்டின் கரன்சிக்கு அரணாகவும் தங்கத்தை பயன்படுத்துகின்றன.
பெரும்பாலான நாடுகளின் வங்கிகள் தங்கத்தை தங்கள் நாட்டில் இல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள கிடங்குகளில் பத்திரமாக வைத்துள்ளன.அப்படி பல நாடுகளும் நம்பிக்கையோடு தங்கத்தை வைத்திருந்த ஒரு நாடு அமெரிக்கா. ஆனால் டிரம்பின் பதவி காலத்தில் உலக நாடுகள் அமெரிக்கா மீதான நம்பிக்கையை இழந்து வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

நெதர்லாந்து அரசு தனது தங்க கட்டிகளை அண்மையில் அமெரிக்காவில் இருந்து எடுத்து அவசர அவசரமாக லண்டனுக்கு இடம் மாற்றம் செய்துளது. பிரான்ஸ் தனது தங்கத்தை நியூயார்க்கிலிருந்து ஐரோப்பாவிற்கு மாற்றியுள்ளது. தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பல நாடுகளும் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றி வருகின்றன.
நெதர்லாந்தின் மத்திய வங்கியான De Nederlandsche Bank கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த சுமார் 86 டன் தங்கத்தை லண்டனுக்கு மாற்றியுள்ளது. இதில் 78 டன்னுக்கும் அதிகமான தங்கம் நியூயார்க்கிலிருந்தும், சுமார் 7 டன் தங்கம் ஒட்டாவாவிலிருந்தும் மாற்றப்பட்டது.
இதனால் நியூயார்க்கில் உள்ள நெதர்லாந்து தங்கத்தின் பங்கு 31.3% இலிருந்து 18.5% ஆக குறைந்துள்ளது. அதேபோல லண்டனில் உள்ள பங்கு 18.1% இலிருந்து 32.1% ஆக உயர்ந்தது. இதன் மூலம் நெதர்லாந்தின் தங்க இருப்புக்கான முக்கிய மையமாக லண்டன் மாறியுள்ளது. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக DNB கவர்னர் ஸ்லீஜெபன் கூறியுள்ளார். அவசர காலங்களில் தங்கத்தை உடனடியாக பயன்படுத்தவும், அதன் வணிக தன்மையை அதிகரிக்கவும் இது உதவும் என கூறியுள்ளார்.
இதே போல பிரான்சின் மத்திய வங்கியான Banque de France, நியூயார்க்கில் வைக்கப்பட்டிருந்த 129 டன் தங்கத்தை ஐரோப்பாவிற்கு மாற்றியுள்ளது.ஆனால் லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் நிர்ணயித்த 99.99% தூய்மை தரம் நியூயார்க்கில் வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளில் இல்லை என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக விளக்கம் தந்தது.
இந்தியா பொறுத்தவரை நம் ரிசர்வ் வங்கியிடம் 880.52 டன் தங்கம் உள்ளது. இதில் 680.05 டன் தங்கம் , அதாவது சுமார் 77% இந்தியாவிற்குள்ளேயே உள்ள பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 200.47 டன் தங்கம் மட்டுமே வெளிநாடுகளில் அதாவ்து லண்டன் போன்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
2025 மார்ச் மாதம் 511.98 டன் தங்கம் மட்டுமே இந்தியாவில் இருந்தது. ஆனால் கடந்த ஒரே ஆண்டில் சுமார் 168 டன் தங்கம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டு உள்நாட்டு இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணத்தை ஆர்பிஐ அதிகாரப்பூர்வமாக விளக்கவில்லை.
ஜெர்மனி கூட கடந்த 2013 மற்றும் 2017 ஆண்டுகளுக்கு இடையில் நியூயார்க் மற்றும் பாரிஸில் இருந்த சுமார் 300 முதல் 374 டன் தங்கத்தை தனது சொந்த நகரான பிராங்க்பர்ட்டுக்கு இடம் மாற்றம் செய்தது. ஒரு நாட்டிற்கும் அதன் மத்திய வங்கிக்கும் தங்கம் வாங்குவது மட்டுமல்ல அதனை பாதுகப்பது பெரிய சவால். தங்கத்தை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் இன்சூரன்ஸ் செலுத்த வேண்டும் அடிக்கடி கணக்கு செய்து பார்க்க வேண்டும் என பல சவால்கள் இருக்கின்றன.
இதனால் தான் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் தங்கத்தை பராமரிக்க பெரும்பாலான நாடுகள் விரும்புகின்றன. ஆனால் அமெரிக்க அரசின் கடன்கள் அதிகரிப்பு, திடீர் திடீரென நிலைபாட்டை மாற்றும் டிரம்ப் என பல காரணங்களால் அமெரிக்காவில் இருக்கும் தங்கத்தை உலக நாடுகள் வெளியே எடுப்பதாக கூறப்படுகிறது. திடீரென விதிக்கப்படும் வர்த்தக வரிகள், போர்கள் ஆகிய காரணங்களால் தங்கம் இன்னும் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் நல்லது என கருதி இப்படி செய்வதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications



