ஈரான் போர் தீவிரமாக இருந்த போது பிரதமர் மோடி மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டார். இதனை அடுத்து மக்கள் தங்கம், வாங்குவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது.
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை தொடர்ந்து அரசுக்கு கணிசமான அளவு வரி வருவாய் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வால் அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைத்தது என கூறியுள்ளார்.

கடந்த மே 13 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் இறக்குமதி மூலமாக அரசு மொத்தம் 10,463 கோடி ரூபாய் சுங்க வரியாக வசூலித்துள்ளது. இதன்படி தங்கம் மூலம் மட்டும் 10,040 கோடி, வெள்ளி மூலம் 328 கோடி, பிளாட்டினம் இறக்குமதி மூலம் 95 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
இந்த காலகட்டத்தில் தங்கம் இறக்குமதிக்கான தேவை அதிகமாக இருந்ததால், மொத்த வருவாயில் பெரும்பகுதி தங்கத்தின் மூலமே பெறப்பட்டுள்ளது. மே 13 ஆம் தேதி முதல் தான் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பிளாட்டினம் மீதான வரி 6.4 சதவீதத்தில் இருந்து 15.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதனால் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்தன. பின்னர் உலகளாவிய சூழலால் விலை குறைந்தது.
ஈரானில் நிலவிய மோதல்கள் காரணமாக கச்சா எண்ணெய், உணவு பொருட்கள் மற்றும் உரங்களின் விலை உயர்ந்தது.எனவே அவசியமில்லாத வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்தவும், கச்சா எண்ணெய் மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு வெளிநாட்டு பணம் இருப்பை உறுதி செய்யவும் தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். எனவே அரசு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். ஈரான் போர் தணிந்து வருகிறது மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் இறக்குமதி வரியை பழையபடி 6%ஆக குறைத்தால் இந்தியாவில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பு உண்டாகும். ஆனால் அரசு தான் இதில் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications

