மும்பை : தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில் மறுபுறம் தங்கம் கடத்தலும் அதிகரித்து வருகிறது.
ஒரு புறம் மத்திய அரசு தங்கம் இறக்குமதியை குறைக்க வரிகளை உயர்த்தி வருகிறது. ஆனால் இதனால் மறுபுறம் இது தங்கம் கடத்தல் அதிகமாகி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்படும் தங்கத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டதே என சர்வதேச தங்க கவுன்சிலின் மேலாண் இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான வரியை மத்திய அரசு அதிகரித்தது. இதன் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்ந்தது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச சந்தையிலும் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது.
இதனால் இந்தியாவில் சட்ட விரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவதும் அதிகரித்தது. ஒவ்வொரு முறையும் அரசு வரியை அதிகரிப்பதன் விளைவாக தங்கத்திற்கான கடத்தலும் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இப்போது கடத்தலுக்கான முனைப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவில் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதால் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.39,885-ஐ எட்டியது. இந்த ஆண்டு மட்டும் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட தங்கத்தின் அளவு 30 முதல் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு 140 டன் தங்கம் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய நகை விற்பனை கழக தலைவர் அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்து வருவதால் இது இந்தியாவின் தேவையில் பெரும் சதவிகிதமாக இருக்கக் கூடும். இது நடப்பு ஆண்டில் 14 சதவிகிதமாக அதிகரிக்கக் கூடும் என்றும், இதுவே முந்தைய ஆண்டில் இது 12 சதவிகிதமாகவும் உலக தங்க கவுன்சில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் எல்லா நேரத்திலும், கடத்தல் தங்கத்தின் அளவும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. 2013ல் இறக்குமதி வரி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக 2014 ல் 225 டன் தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இது நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் 2018ம் ஆண்டை விட 40 சதவிகிதம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக இணையத்தள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, தைவான், ஹாங்காங், நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்தே இந்தியாவிற்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய அரசு இறக்குமதி வரியை குறைத்தால் தங்கம் கடத்தப்படுவது குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.