சமீப மாதங்களாகவே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வரும் மற்றொரு சந்தேகம், இனி வரும் காலத்தில் தங்கம் பாதுகாப்பு புகலிடமாக இருக்குமா? அல்லது பிட்காயினா? எது லாபகரமானதாக இருக்கும் என்று தான்.
இந்தியாவில் மக்களின் உணர்வுடன் கலந்துள்ள தங்கமானது, சிறந்த ஆபரணமாக மட்டும் அல்லது, சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
எந்த முதலீட்டு போர்ட்போலியோவாக இருந்தாலும் அதில் தங்கம் இடம் பெறாமல் இருக்காது. அந்தளவுக்கு மக்களின் மனதில் இடம்பெற்ற ஒரு விலை மதிப்புமிக்க உலோகமாகும். ஆனால் சமீப காலங்களாக பிட்காயினின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
லாபகரமான முதலீடு
கடந்த சில மாதங்களாக தங்கக்த்தினை விட, பிட்காயின் முதலீடுகள் மிக லாபகரமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறுகிய காலத்தில் நல்லதொரு லாபகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் இதில் அதே அளவு ரிஸ்கும் உள்ளதை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆக இதில் முதலீடு செய்யும் முன்னர் இது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
பிட்காயின் தாக்கம்
பிட்காயின் ஒரு டிஜிட்டல் கரன்ஸி என்பதால் நிஜ உலகில் இருப்பதை விட, விர்ச்சுவல் உலகில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம். இதனால் தான் இதன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நிஜ கரன்ஸிகளை விட இவை பலம் வாய்ந்தவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது பிட்காயினில் முதலீடு செய்வது பின்னர் பெரும் வருமானத்திற்கு வழிவகுக்கும். ஆனால் குறுகிய காலத்தில் பெரிய விலை ஏற்ற இறக்கங்களை காணலாம். இதனால் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதொரு முதலீடாக பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு புகலிடமான தங்கம்
இப்போது, நீண்ட காலத்திற்கு நிலையான முதலீட்டு ஏற்ற தங்கத்தினை பற்றி பார்க்கலாம். மந்தநிலையின் போதும், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போதும், பாதுகாப்பு புகலிடமாக தங்கத்தின் விலைகள் உள்ளன. இதனால் பொருளாதாரம் ஏற்றம் காணும் போது தங்கம் விலை வீழ்ச்சி காண்கின்றது.
பிட்காயின் மீதான ஆர்வம்
கடந்த ஆண்டில் கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், பிட்காயின் முதலீட்டில் அதிக ஆபத்துகள் இருந்தாலும், பல தனியார் நிறுவன முதலீடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக பிட்காயின் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இந்த நிலையில் இனி வரும் காலத்தில் தங்கத்தினை விட, பிட்காயின் சிறந்த முதலீடாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து புதிய உச்சம்
கடந்த 2020லேயே கொரோனா ரணகளத்திற்கு மத்தியிலும், பிட்காயின் விலையானது, தங்கத்தினை ஒரங்கட்டி புதிய வரலாற்று உச்சத்தினை எட்டியது. இதற்கிடையில் தற்போது புத்தாண்டு முடிந்து சில தினங்களே ஆன நிலையில், மீண்டும் புதிய உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. தற்போது முதன் முதலாக கடந்த வியாழக்கிழமையன்று 40,000 டாலர்களையும் தொட்டுள்ளது. இது கடந்த 5 நாட்களில் சுமார் 10,000 டாலர்கள் ஏற்றம் கண்டுள்ளது.
முதலீட்டாளர்கள் ஆர்வம்
அதோடு கொரோனா காலத்திலும் பிட்காயின் விலையானது, எந்தவொரு முக்கிய காரணிகளாலும் பாதிக்கப்படவில்லை. இதனால் மிகபெரிய முதலீட்டாளர்கள் கூட பிட்காயினை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக அமெரிக்கா போன்ற நாடுகளின் முதலீட்டாளர்கள், பிட்காயின் மிக ஆர்வம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
தங்கத்தினை பாதிக்கலாம்
இது முதலீட்டாளர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தின்
மத்தியில், பிட்காயின் விலையானது அபரிதமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் இந்த டிஜிட்டல் கரன்சியானது, கிட்டதட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் நிபுணர்கள் முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக் கொள்வது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை பாதிக்கக்கூடும் என்றும் கூறியிருந்தனர்.
ஜேபி மார்கனின் கணிப்பு
உண்மையில் பிட்காயின் விலையானது கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 10,000 டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. இதே ஆய்வு நிறுவனமான ஜேபி மார்கன் பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலரை தொடலாம் என்றும் கணித்துள்ளது. இது தங்கத்திற்கு இணையாக அல்லது அதற்கு மேலும் வளர்ச்சி காணலாம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
தங்கமோ? பிட்காயினோ? முதலீடு செய்யும் போது சந்தை காரணிகளை கவனித்து அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது.