நடப்பு ஆண்டில் கொரோனாவிற்கும் மத்தியில் தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது. இது பாதுகாப்பு புகலிடம் என்பதால் தங்கத்தில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்தன.
ஆனால் நடப்பு ஆண்டில் தங்கத்தினை விட, தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த உலோகமான வெள்ளி அதிக லாபம் கொடுத்துள்ளது கவனிக்கதக்கது.
அதிலும் கொரோனாவின் மத்தியிலும் இதன் விலை அதிகரிப்பு, தொழிற்துறை வளர்ச்சி, பொருளாதாரம் மீண்டு வருவதையே சுட்டிக் காட்டுகின்றது.
தூள் கிளப்பிய வெள்ளி
நடப்பு ஆண்டினை பொறுத்தவரையில் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது 25% ஏற்றம் கண்டுள்ளது. எனினும் அதே நேரம் இரட்டிப்பு மடங்காக இதுவரையில் வெள்ளி விலையானது 50% ஏற்றம் கண்டுள்ளது. இதே சர்வதேச சந்தையில் ஸ்பாட் வெள்ளியின் விலையானது அவுன்ஸூக்கு 26.64 டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவரையில் சர்வதேச சந்தையில் 49% ஏற்றம் கண்டுள்ளது.
பிளாட்டினம் & பல்லேடியம்
இதே மற்றொரு விலையுயர்ந்த ஆபரணமான பல்லேடியம் ஐந்தாவது தினமாக சந்தையில் தொடர்ந்து 20% மேலாக ஏற்றம் கண்டு வருகின்றது. இதே பிளாட்டினம் 11% ஏற்றம் கண்டுள்ளது. தங்கம் விலையானது சற்று குறைவான ஏற்றம் கண்டிருந்தாலும், ஒரு தசாப்தத்தில் மிகப்பெரிய ஏற்றத்தினை எட்ட உள்ளது. குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இரண்டும் வலுவான லாபத்தினை பதிவு செய்துள்ளன.
செம குஷியில் இந்திய முதலீட்டாளர்கள்
குறிப்பாக தங்கம் 27% ஏற்றத்திலும், வெள்ளி விலையானது 50% ஏற்றத்திலும் காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 கிராம் தங்கமானது 56,200 ரூபாயினையும், இதே வெள்ளியின் விலையானது கிட்டதட்ட 80,000 ரூபாயினையும் தொட்டது. இது கொரோனாவின் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீட்டினை செய்த நிலையில் ஏற்றம் கண்டது.
வெள்ளிக்கு அதிகரிக்கும் ஆதரவு
இருப்பினும் தற்போது கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் சாதகமாக வந்துகொண்டுள்ள நிலையில், தற்போதும் தங்கம் விலையானது 50,000 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளியின் விலையானது 68,500
ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. குறிப்பாக வெள்ளியின் விலையானது, அமெரிக்காவின் தூண்டுதல் தொகுப்பு, தேவை அதிகரிப்பு, சீன பொருளாதாரம் குறித்த நம்பிக்கையை மேம்படுத்துதல் என பலவும் வெள்ளிக்கு ஆதரவாக உள்ளன.