இந்தியா உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட் சந்தை. இதனால் தான் பல நிறுவனங்களும் போட்டிபோட்டு கொண்டு இங்கே தங்களின் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. ஆனால் அண்மை காலமாக ஸ்மார்ட் போன் சந்தையில் பெரிய மாற்றம் வந்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை அண்மை காலமாக மந்த மடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் போன் விலை ஏற்றம். ஸ்மார்ட் போன் உற்பத்திக்கான உபகரணங்கள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சிப்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட் போன் உற்பத்தி செலவு அதிகமாகி விலையும் உயர்ந்து வருகிறது.

கவுன்டர்பாயிண்ட் ரிசர்ச் மற்றும் ஐடிசி போன்ற நிறுவனங்களின் தரவுகளின்படி, நடப்பாண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விநியோகம் ஆண்டு அடிப்படையில் 10% முதல் 11% வரை சரிவை கண்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய சரிவு இதுவாகும். இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பின் மொபைல் போன்களுக்கான தேவை மந்தமாக இருப்பதால், விற்பனையை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.
இதன்படி இந்தியாவில் மொபைல் போன்கள் தயாரிப்பு, ஏற்றுமதி, விற்பனை ஆகியவற்றை ஊக்குவிக்க எதிர்வரும் ஜிஎஸ்டி கூட்டத்தில் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் 62,500 கோடி மதிப்பிலான மொபைல் போன் உற்பத்தித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அரசின் இந்த லட்சிய இலக்குகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்போது செல்போன்களுக்கு அரசு 18% வரி விதிக்கிறது. இந்த ஜிஎஸ்டி வரியை 18%இல் இருந்து குறைத்தால் செல்போன்களின் விலை குறையும். இதனால் செல்போன்கள் விற்பனை பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மத்திய அரசு ஜிஎஸ்டி வரிகளை பெருமளவில் மாற்றி அமைத்தது. இதனை அடுத்து பல்வேறு பொருட்களின் விலைவாசி குறைந்தது. எனவே இதனை அடிப்படையாக கொண்டு தான், செல்போன்கள் மீதான வரியையும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாம்.
செல்போன் உற்பத்தி ஊக்குவிப்பு, ஏற்றுமதி, விற்பனை ஆகிய மூன்றிலும் இந்தியாவை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. இதனால் தான் செல்போன் உற்பத்திக்கு தனி திட்டத்தையும், விற்பனைக்கு தனி வரி விகித மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே 10,000 ரூபாய்க்கு கீழ் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு சந்தைக்கு வருவதே இல்லை. இதனால் பட்ஜெட் விலையில் போன் வாங்குவோர் கடும் சிரமம் அடைந்து வருகின்றானர். அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்தால் மீண்டும் பட்ஜெட் விலையில் போன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications

