ஏஐ தொழில்நுட்பம் அண்மை காலமாகவே எல்லை மீறி செயல்படும் நிகழ்வுகள் அதிகரித்துவிட்டன. அதாவது மனிதர்களின் கட்டளைகளை மீறுவது, மனிதர்களுக்கு தெரியாமல் ரகசியமாக செயல்படுவது என நாளுக்கு நாள் புது புது புகார்கள் வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு ஓபன் ஏஐ நிறுவனத்தின் ஏஐ அமைப்புகள் Hugging face நிறுவனத்தை ஹேக் செய்து அதிர்ச்சியை தந்தன. ஏஐ ஏஜெண்டுகள் ஒரு டீமாக செயல்பட்டு மனிதர்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டும் என திட்டம் தீட்டி இந்த ஹேக்கிங்கில் ஈடுபட்டது ஆய்வில் தெரிய வந்தது. இந்த தகவல் வெளியானது முதலே ஏஐ ஆய்வுகளை மட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக குரல்கள் எழ தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் அதிநவீன ஜெமினி ஏஐ மாடல், கடந்த மே மாதத்தில் நடைபெற்ற இணைய பாதுகாப்பு பரிசோதனையின் போது, இன்டர்நெட் மூலம் மூன்று வெவ்வேறு நிறுவனங்களின் அமைப்புகளை தன்னிச்சையாக ஊடுருவி ஹேக் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் அதன் ஏஐ அமைப்பு இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கையில் ஈடுபட்டது இதுவே முதல் முறை.
ஏஐ அமைப்புகளின் பாதுகாப்பு திறன்களை சோதிப்பதற்காக செயல்படும் Irregular என்ற தனிப்பட்ட பாதுகாப்பு நிறுவனத்தால் நடத்தப்பட்ட பாதுகாப்பு மதிப்பீட்டின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு பொறியியல் பிரிவின் துணை தலைவர் ஹீதர் அட்கின்ஸ் ஜெமினி மாடல் இணையத்தில் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய தகவல்களை தேடி பிடித்துள்ளது. மேலும், மூன்று வலைத்தளங்களை தானாகவே ஹேக் செய்துள்ளது என கூறியுள்ளார்.
ஒரு தளத்தில், பாதுகாக்கப்பட்ட அமைப்பை அணுகும் வரை ஜெமினி மீண்டும் மீண்டும் கடவுச்சொற்களை யூகித்து உள்ளே நுழைந்துள்ளது. பின்னர் பொதுவான தளங்களில் இருக்கும் Credentials-களைகண்டறிந்து, அவற்றை பயன்படுத்தி பாதுகாக்கப்பட்ட அமைப்புகளுக்குள் நுழைந்துள்ளது. எனினும், அந்த அமைப்புகளுக்குள் நுழைந்தவுடன் ஜெமினி தனது ஹேக்கிங் நடவடிக்கையைத் தானே நிறுத்திவிட்டது என அட்கின்ஸ் கூறியுள்ளார்.
சக்திவாய்ந்த ஏஐ மாடல்களை பொறுப்புடன் செயல்பட பயிற்றுவிப்பதன் அவசியத்தை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன என ஹீதர் அட்கின்ஸ் தெரிவித்துளார். ஜெமினிக்கு முன்பாக, மெட்டா, ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன் ஏஐ போன்ற பிற முன்னணி ஏஐ நிறுவனங்களின் மாடல்களும் இதே போன்ற சோதனைகளின் போது கட்டளைகளை மீறி செயல்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதம் மெட்டா நிறுவனம் தனது ஏஐ மாடல் கட்டளைகளை மீறி தானாக செயல்பட்டதை ஒப்பு கொண்டது. எனினும், அது கடுமையான சைபர் தாக்குதல் அல்ல என்றும், பாதுகாப்பு சோதனைகளின் ஒரு பகுதி என்றும் கூறியிருந்தது.
ஏஐ அமைப்புகள் நாளுக்கு நாள் தன்னிச்சையாக இயங்கும் திறன் , ஆன்லைன் தளங்களை அணுகும் திறன் மற்றும் கணினி அமைப்புகளை கையாளும் திறன்களில் மிக வேகமாக முன்னேறி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் ஏஐ தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. ஏற்கனவே ஓபன் ஏஐ , ஆந்திராபிக் நிறுவன தலைவர்கள் ஏஐ ஆய்வுகளை மட்டுப்படுத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications


