இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளான ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது மோடி தலைமையிலான அரசு. இந்தப் பங்கு விற்பனை மூலம் சுமார் 22,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் படி ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கி பங்கு விற்பனையை இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விற்பனை அனைத்தும் பல்க் டீல் முறையில் இந்திய பங்குச்சந்தையில் செய்ய உள்ளது.
பங்கு இருப்பு
மத்திய அரசு மார்ச் 31, 2020ஆம் தேதி வெளியிட்ட தகவல்களின் படி Specified Undertaking ஆப் யூனிட் டிர்ஸ்ட் ஆப் இந்தியா கீழ் ஐடிசி நிறுவனத்தில் 7.94 சதவீத பங்குகளும், ஆக்சிஸ் வங்கியில் 4.96 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. இந்தப் பங்குகளைத் தான் தற்போது மத்திய அரசு விற்பனை செய்து 22,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க முடிவு செய்துள்ளது.
பங்கு மதிப்பு
மத்திய அரசின் இந்த அறிவிப்பின் எதிரொலியாகப் புதன்கிழமை வர்த்தக முடிவில் ஐடிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் 5.15 சதவீதம் சரிந்து 164.95 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஆனால் ஆக்சிஸ் வங்கி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1.16 சதவீதம் உயர்ந்து 393.50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இவ்விரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு கிட்டதட்ட 22,000 கோடி ரூபாய்.
தொடர் சரிவு
ஆக்சிஸ் வங்கியில் வராக் கடன் தொடர்ந்து உயர்ந்து வருவதை முதலீட்டாளர்கள் கணித்ததன் விளைவாகக் கடந்த 3 மாதத்தில் மட்டும் ஆக்சிஸ் வங்கியின் பங்கு மதிப்பு சுமார் 53 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் ஐடிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு பல்வேறு காரணங்களால் சுமார் 19 சதவீதம் வரையில் இந்த 3 மாதத்தில் சரிந்துள்ளது.
2.1 லட்சம் கோடி ரூபாய்
நடப்பு நிதியாண்டில் மட்டும் மத்திய அரசு சுமார் 2,10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எல்ஐசி நிறுவனத்தின் 90,000 கோடி ரூபாய் மதிப்புடைய பங்கு விற்பனையும் அடக்கம்.