டெல்லி: ஜூன் 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளுக்கும், ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தங்க நகைகளின் மீது அதீத ஆர்வம் காரணமாக, மக்கள் என்னதான் விலை உச்சத்தில் இருந்தாலும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.
அப்படியே விலை அதிகம் கொடுத்து வாங்கினாலும், நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற சுத்தமானதாக உள்ளதா என்றால் பல இடங்களில் நிச்சயம் இல்லை. இதிலும் பல முறைகேடுகள். ஆக இதனை தடுப்பதற்காகவே தங்க நகைகளில் ஹால்மார்க் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பலமுறை அறிவிப்புகள்
எனினும் இதுகுறித்து ஏற்கனவே பலமுறை அறிவிப்புகள் வந்தும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டுள்ள நிலையில், இது அமலுக்கு கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தங்கத்தின் தேவையானது மீண்டு வர தொடங்கியுள்ளது. இதனால் மத்திய அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 1முதல் கட்டாயம்
இது குறித்து நுகர்வோர் விவகார செயலர் லீனா நந்தன், தங்க ஆபரணங்களுக்கான ஹால்மார்க் திட்டத்திற்கு ஏற்கனவே பல முறை அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் காலக்கெடு அவகாசம் கோரி இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. இந்த திட்டத்தினை செயல்படுத்துவதில் பிஐஎஸ் ஹால்மார்க் முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றது. ஆக ஜூன் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் லீனா நந்தன் கூறியுள்ளார்.
இனி விற்பனை எப்படி?
இந்த நடைமுறையினால் நகை விற்பனையாளர்கள் 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும். இதோடு இந்திய தர நிர்ணய அமைப்பு பிஐஎஸ் சான்றான ஹால்மார்க் முத்திரை இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளன. சுமார் 34,647 நகைக்கடைகள் இதில் பதிவு செய்துள்ளன. ஏப்ரல் 2000 முதல் இந்த ஹால்மார்க் திட்டம் இயக்கப்பட்டு வருகின்றது.
நகை வாங்கும்போது பார்த்து வாங்குங்கள்
ஏற்கனவே அரசு ஹால்மார்க் முத்திரை மற்றும் மதிப்பீடு மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளதாக கூறியிருந்தது. இந்த நிலையில் ஜூன் 1 முதல் நகை வாங்குபவர்கள் பிஐஎஸ் ஹால்மார்க் தர முத்திரை, கேரட் அளவு, மதிப்பீடு மையத்தின் பெயர் மற்றும் ஜூவல்லரி முத்திரை இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.