மத்திய சாலை மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகன அழிப்பு திட்டத்தின் காரணமாக, பயணிகள் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்கலாம் என நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பழைய வாகன அழிப்பு கொள்கையானது வெளியிடப்பட்டது. இந்த பழைய வாகன அழிப்பு கொள்கையின் கீழ், தங்களது வாகனங்களை ஸ்கிராப் செய்யும் நபர்கள், புதிய பயணிகள் வாகனங்களை வாங்கும்போது ஜிஎஸ்டியில் சலுகை அளிக்கலாம் என நிதின் கட்கரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது வாகன அழிப்பு திட்டத்தின் மூலம் ஜிஎஸ்டி வருவாய் மற்றும் வாகன பதிவிலிருந்து வருவாய் அதிகரிக்கும். அதே சமயம் தங்களது பழைய வாகனங்களை மாற்றி, புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு சற்றே நிவாரணம் வேண்டும் என கட்கரி கூறியுள்ளார்.
வாகனம் வாங்குபவர்களுக்கு சலுகை
இன்று வெளியிடப்பட்ட புதிய கொள்கையின் படி, தங்களது பழைய வாகனங்களை தானாக முன்வந்து ஸ்கிராப் செய்பவர்களுக்கு, புதிய வாகனங்களை வாங்கும்போது சாலை வரியில் தள்ளுபடி பெற முடியும். இதில் பயணிகள் வாகனங்கள் என்றால் 25% வரை தள்ளுபடியும், அதுவே வர்த்தக வாகனங்கள் என்றால் 15% வரை தள்ளுபடி பெற முடியும். அத்துடன் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ததற்கான சான்றிதழ் இருந்தால், புதிய வாகனங்களை வாங்கும்போது பதிவு கட்டணத்தையும் தள்ளுபடி செய்ய முடியும் என்கிறது.
ஜிஎஸ்டியில் சலுகை
இதற்கிடையில் புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு, ஜிஎஸ்டியில் சலுகை அளிக்கப்பட வேண்டும் என நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு வாகன அழிப்பு திட்டத்தின் மூலம் பழைய வாகனங்கள் அழிக்கப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கும்போது, மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாயானது 30,000 கோடி ரூபாயிலிருந்து, 40,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
எவ்வளவு ஜிஎஸ்டி
தற்போது பயணிகள் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி விகிதமானது 28% ஸ்லாப்பில் உள்ளது. எப்படி இருப்பினும் இந்த கோரிக்கையின் இறுதி முடிவு நிதியமைச்சகத்திடமே உள்ளது. நாங்கள் ஒரு கோரிக்கையை வைத்துள்ளோம். ஆனால் முடிவு அவர்களுடையது என்றும் கட்கரி கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி கூட்டத்தில் ஆலோசிக்கலாம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், இது குறித்து ஆலோசிக்கப்படலாம். பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு மத்தியில் அது எவ்வாறு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதிக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
மாற்றம் இருக்குமா?
எனினும் கொரோனாவுக்கு பிறகு வரி வருவாயில் பெரும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், வரவிருக்கும் கூட்டத்தில் வரியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். உண்மையில் புதிய வாகன அழிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், ஜிஎஸ்டியை குறைத்தால், அதுவும் வாகன விற்பனையை ஊக்கப்படுத்தும். ஆக இது நிதியமைச்சகத்தின் கையில் தான் உள்ளது. கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே.