டெல்லி: இந்திய அரசாங்கம் கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் சொன்ன பட்ஜெட்டில், ஜிஎஸ்டி மூலம், ஒரு குறிப்பிட்ட அளவு வரி வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்தது.
கடந்த 9 மாதங்களில், பல முறை, அரசு நிர்ணயித்த இலக்கை விட குறைவான ஜிஎஸ்டி வரி வருவாய் தான் வசூலானது. இந்த வரி வசூல் குறைவை சமாளிக்க மத்திய அரசு போராடிக் கொண்டு இருக்கிறது.
எப்படியாவது வரி வருவாயை அதிகரிக்க சமீபத்தில் தான் வரி வருவாய் வசூல் இலக்குகளை உயர்த்தினார்கள்.
மீண்டும் ஏற்றம்
அப்படியும் சரிப்பட்டு வரவில்லை போல. கடந்த இரண்டு மாத காலத்தில், தற்போது இரண்டாவது முறையாக, ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் இலக்கை மீண்டும் அதிகரித்து இருக்கிறது மத்திய அரசு. அதுவும் அடுத்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்துக்கு மட்டும் அதிகரித்து இருக்கிறார்களாம்.
எவ்வளவு அதிகம்
தற்போது டிசம்பர் 2019-க்கு 1.1 லட்சம் கோடி ரூபாயை ஜிஎஸ்டி வரி வருவாய் மூலம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து இருந்தார்கள். ஆனால் இப்போது அடுத்த பிப்ரவரி 2020 மற்றும் மார்ச் 2020 மாதங்களுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாயை ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் இலக்காக நிர்ணயித்து இருக்கிறார்களாம்.
ஆலோசனைக் கூட்டம்
அடுத்த இரண்டு மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கை 1.1 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்தும் முடிவை, மத்திய மறைமுக வரிகள் மற்று சுங்க வரி வாரியம் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) மற்றும் நேரடி வரிகள் வாரியம் ( Central Board of Direct Taxes (CBDT)) உயர் அதிகாரிகள் பங்கெடுத்த உயர் மட்டக் குழு தான் எடுத்து இருக்கிறார்களாம்.
கடுமையான நடவடிக்கை
வேண்டும் என்றே, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி வருவாயை செலுத்தாமல், சட்ட விரோதமாக, போலி ஆவணங்களைக் காட்டி ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்கள் மீது, தனியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க ஊக்குவித்துக் கொண்டு இருப்பதாக ஒரு அரசு அதிகாரியே சொல்லி இருக்கிறார்.
எனவே சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பவர்கள், இப்போதே வரி செலுத்தி விடுவது நல்லது.