பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை உணர்ந்து நாட்டு மக்களைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காக மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது 45 வயதிற்கு அதிகமானோர் மட்டுமே கொரோனா தடுப்பு மருந்தைப் பெற அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு அதிகம் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பு மருந்து பெறலாம் என அறிவித்துள்ளது.
கொரோனா 2வது அலை
கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் இளம் தலைமுறையினர் இந்த முறை அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளனர். இது மக்களுக்கும் சரி, நாட்டின் பொருளாதாரத்திற்கும் சரி மிகவும் மோசமான நிலை என்பதால் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து என்கிற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
தனியார் மருத்துவமனை
இதுமட்டும் அல்லாமல் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கும் உரிமையை மத்திய அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும், மாநில அரசு தனது கைகளுக்குக் கொடுத்துள்ளது. இதனால் மாநில அரசு தனது விருப்பத்தின் படி எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்.
தனியார் மருத்துவமனைக்கு அதிகாரம்
இதேபோல் மே 1 முதல் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மருந்தை பெற வேண்டும் என்றால் அரசை நாடவேண்டியது இல்லை, தனியார் மருத்துவமனைகள் நேரடியாகச் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் பேசி பெற வேண்டும்.
அரசு கட்டுப்பாட்டில் வேக்சின்
கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் மற்றும் நிர்வாகம் அரசு கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் இதன் விலை தொடர்ந்து 250 ரூபாய் அளவீட்டிலேயே உள்ளது. இந்நிலையில் மருந்து வாங்கும் உரிமையைத் தனியார் அமைப்புகளிடம் கொடுக்கும் போது பற்றாக்குறையும் ஏற்படும், இதேவேளையில் வேக்சின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மே 1 முதல் வேக்சின்
மத்திய அரசு 18வயதிற்கு அதிகமானோர் அனைவருக்கும் மே 1 முதல் கொரோனா தடுப்பு மருந்தை பெற அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பு மருந்து பெற தகுதி உடையவர்கள் எண்ணிக்கை 94 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் ஒரு மாதத்திற்கு வெறும் 8 கோடி பேருக்கான கோவிட் வேக்சின் மட்டுமே தயாரிக்கும் தளம் உள்ளது.
வேக்சின் தயாரிப்பு
இதேவேளையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பை அதிகரிக்க அட்வான்ஸ் பேமெண்ட் ஆகச் சீரம் மற்றும் பார்த் பயோடெக் நிறுவனங்களுக்கு 4500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வேக்சின் இறக்குமதி
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு மூலம் இந்தியாவில் வேக்சின்-கான தேவை அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்வதை எளிதாக்கும் பொருட்டுக் கோவிட் வேக்சின் மீது இருந்த இறக்குமதி வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு மருந்து
மத்திய அரசு ஏற்கனவே ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் மருந்தை இந்தியாவிற்குக் கொண்டு வர உள்ள நிலையில், விரைவில் பைசர், மாடெர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்தையும் இந்தியாவிற்குக் கொண்டு வர பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆக்சிஜன் உற்பத்தி
மேலும் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் தவித்து வரும் நிலையில் விரைவில் ஆக்சிஜன் அளவீட்டை 25 சதவீதம் அதிகரித்து அரசு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.