டெல்லி: ஜான்சன் & ஜான்சன் என்றால் இன்றைய பெரியோர்கள் முதல் சிறியோர் வரை கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. அந்தளவுக்கு பட்டி தொட்டியெல்லாம் அதன் நுகர்வோர் பொருட்கள் பரவிக் கிடக்கின்றன. குழந்தைகளுக்கான சோப்பு, ஷாம்பு முதல் அனைத்து பொருட்களும் தயாரித்து விற்பனை செய்வதே இதன் முக்கிய வேலை.
இது ஒரு புறம் எனில், அடிக்கடி ஏதேனும் சர்ச்சையில் சிக்கித் தவித்து வரும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், மிகப் பெரிய அபராத தொகையாயினும் செலுத்தி வருவது வாடிக்கையான விஷயமே.
சரி இப்பொழுது இந்த நிறுவனத்திற்கு எதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது? என்ன பிரச்சனை என்று தான் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம்.
பல வழக்குகள்
ஒரு புறம் ஜான்சன் & ஜான்சனின் குறிப்பிட்ட பொருட்களை பயன்படுத்துவதால், மிகப்பெரிய பின்விளைவுகள் இருப்பதாக சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தின் மீது பல நூறு வழக்குகள் உள்ளது. ஏன் சில வழக்குகளில் இதற்காக கோடிக்கணக்கான ரூபாயும் அபராதமாக செலுத்தியுள்ளது இந்த நிறுவனம். அதிலும் அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டியில் மோசடி
இந்த நிலையில் ஜிஎஸ்டி வசூலில் முறைகேட்டில் ஈடுபட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 230 கோடி ரூபாய் அபராதம் விதித்து என்ஏஏ உத்தரவிட்டுள்ளது. அவ்வப்போது ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் அப்படிக் கொண்டு வரப்படும் மாற்றங்களின் பயனை நுகர்வோருக்கு தர வேண்டியது தயாரிப்பு நிறுவனங்களின் கடமையே. ஆனால் அவ்வாறு அதன் பயனை நுகர்வோருக்கு அளிக்க தவறியதாகவும், இந்தக் குற்றத்துக்காகத் தான் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு 230 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி
கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி, நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. நாட்டில் உள்ள மறைமுக வரிகளை எல்லாம் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஜிஎஸ்டியானது வரி விதிப்பு முறையில் புரட்சிகரமான முயற்சியாக கருதப்பட்டது. பல்வேறு அடுக்குகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டன.
ஜிஎஸ்டி பயன்
மேலும் மாதம்தோறும் கூட்டப்படும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரிவிகிதத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். அவ்வாறு கொண்டு வரப்படும் மாற்றங்களின் பயனை நுகர்வோருக்கு செலுத்த வேண்டியது தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய பணியாகும். ஆக எந்தவொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி விகிதம் குறைக்கப்படும்போது அதை உடனடியாக அந்தப் பொருள்களில் பிரின்ட் செய்து, விலையைக் குறைத்து விற்பனை செய்யப்பட வேண்டும்.
சில நிறுவனங்கள் மோசடி
சில நிறுவனங்கள் ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைத்துக் காட்டுவதோடு, பொருளின் விலையை உயர்த்தி, ஏற்கனவே உள்ள விலையிலேயே விற்பனை செய்வது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றன. இதே சில நிறுவனங்கள் ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைக்காமல் முந்தைய விகிதத்திலேயே விற்பனை செய்வார்கள். ஆனால் அதை கணக்கு தாக்கல் செய்யும் போது கணக்கில் கொண்டு வருவார்கள்.
பலனை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவில்லை
இப்படி ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைத்துக் காட்டுவதன் மூலம், ஜிஎஸ்டி விகித குறைப்பின் பலனை அந்த நிறுவனங்களே அனுபவித்து கூடுதல் ஆதாயம் பெறுகின்றன. அந்த வகையில், ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை நுகர்வோருக்கு கொடுக்காமல், ஜான்சன் & ஜான்சன் நிறுவனமே முழுக்க அனுபவித்துள்ளதும், இதன் மூலம் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் சுமார் 230.4 கோடி ரூபாய் ஆதாயம் கண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
வரி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் மோசடி
கடந்த நவம்பர் 15, 2017 முதல் 178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பினை செய்தது. இதில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் இந்த ஜி.எஸ்.டி விகிதக்குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கொடுக்காமல் மோசடி செய்ததை தேசிய மிகை லாப தடுப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது.
தொடரும் மோசடி
இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு, ஜி.எஸ்.டி சட்டம் 171(3A) பிரிவின்படி 230 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற குற்றச்சாட்டுக்காக நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு, இம்மாத துவக்கத்தில் 90 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.