இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்தாலும் உள்நாட்டுத் தேவை சிறப்பாக இருக்கும் காரணத்தால் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இதன் எதிரொலியாக ஜிஎஸ்டி வரி வசூல் நவம்பர் மாதமும் 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டைத் தொட்டு அசத்தியுள்ளது. தொடர்ந்து 9வது முறையாக 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டுக்கும் அதிகமாக வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல்
மத்திய அரசு தரப்பில் இருந்து இன்று வெளியான தகவல் படி நவம்பர் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1,45,867 கோடி ரூபாயாக உள்ளது என வியாழக்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த நவம்பர் மாதம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி
நவம்பர் மாதம் 1,45,867 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலில் சிஜிஎஸ்டி 25,681 கோடி ரூபாயாகவும், எஸ்ஜிஎஸ்டி 32,651 கோடி ரூபாயாகவும் இருந்தது. ஐஜிஎஸ்டி 77,103 கோடி ரூபாயாக உள்ளது இதில் பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலான வரி 38,635 கோடி ரூபாய் அளவிலான தொகையும் அடங்கும். இதோடு செஸ் மூலம் 10,433 கோடி ரூபாய் இதில் பொருட்களின் இறக்குமதியில் வசூலான 817 கோடி ரூபாயும் அடங்கும்.
ஐஜிஎஸ்டி பிரிப்பு
ஐஜிஎஸ்டி வரி வசூலில் இருந்து சிஜிஎஸ்டி-க்கு 33,997 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டி-க்கு 28,538 கோடி ரூபாயும் அரசு செட்டில் செய்துள்ளது. நவம்பர் 2022 வரி வசூல் தொகையில் சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி-க்கு பிரித்த பின்பு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் அளவில் சிஜிஎஸ்டி-க்கு 59678 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டி-க்கு 61189 கோடி ரூபாயாகவும் உள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு
மேலும், மத்திய நிதி அமைச்சகம் நவம்பர் 2022ல் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக 17,000 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது. இதுவும் மாநில அரசு பங்கிற்குச் செல்ல உள்ளது.
இறக்குமதி சரக்குகள்
நவம்பர் மாதத்தின் போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் மீதான வரி வருவாய் 20 சதவீதம் அதிகமாக இருந்தது, இதேபோல் உள்நாட்டு பரிவர்த்தனையின் வருவாய் கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாக உள்ளது.
பண்டிகை மற்றும் திருமணச் சீசன்
ஜிஎஸ்டி வசூல் படிப்படியாக அதிகரித்து வர முக்கியக் காரணம் பண்டிகை மற்றும் திருமணச் சீசன் துவங்கியுள்ளதால் பல தரப்பட்ட வர்த்தகம் அதிகரித்து வரி வசூல் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணிகளாக உள்ளது.
வாகன விற்பனை
மேலும் இந்த நவம்பர் மாதத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் வாகன விற்பனை சந்தையும் பெரிய அளவில் அதிகரித்து வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் நுகர்வோரின் செலவு செய்யும் அளவுகள் நவம்பர் மாதம் அதிகரித்துள்ளதும் ஜிஎஸ்டி வரி வருவாய்-க்கு ஜாக்பாட் ஆக அமைத்துள்ளது.
வரி ஏய்ப்பு
ஆனாலும் ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்புச் செய்பவர்கள் மீதும், வரி செலுத்தாதவர்கள் மீதும், போலி பில்களை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தான் வருகிறது. சமீபத்தில் கூடச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்குக் குறைவான தொகையைப் பில்லிங் செய்யப்பட்டதால் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.