மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் அளவு கொரோனா 2வது அலை சரிவிற்குப் பின்பு குறைந்த நிலையில் அரசு நிதி நெருக்கடியைச் சந்தித்தது. ஆனால் அடுத்த சில மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை கடந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு
இந்நிலையில் செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் சுமார் 1,17,010 கோடி ரூபாய் அளவிலான தொகையை வசூலித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டிகை காலம்
மேலும் இது லோவர் பேஸ் எபக்ட் இல்லை, கடந்த ஆண்டு முதல் கொரோனா அலை முடிந்த பின்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடையத் துவங்கிய காலமாக இருந்தது. இதனால் தற்போது பண்டிகை காலத்தையொட்டி நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் நிதி நிலை
அதிக ஜிஎஸ்டி வரி வசூல் அளவு அதிகரித்துள்ளது மத்திய அரசின் நிதி நிலையை மேம்படுத்தும் விஷயமாக உள்ளது, இதனால் மத்திய அரசுக்கு இது ஜாக்பாட் ஆக உள்ளது மட்டும் அல்லாமல் நடப்பு நிதியாண்டில் 2வது காலாண்டில் வரி வசூலில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
முதல் காலாண்டை விடவும் 5% உயர்வு
நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. இது முதல் காலாண்டின் 1.10 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை விடவும் 5 சதவீதம் அதிகம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடி அளவு
வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில் அரசின் நிதி நெருக்கடி அளவுகள் வருடாந்திர இலக்கில் ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்திற்கு 31 சதவீதமாகக் குறைந்துள்ளது. வரி வசூல் அதிகரிப்புக்கு மிக முக்கியக் காரணம் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் வர்த்தகம் செய்வதன், வாயிலாகவும் உற்பத்தி அதிகரித்துள்ளதும் முக்கியமானதாக விளங்குகிறது.
ஜிஎஸ்டி பிரிவுகள்
செப்டம்பர் மாத 1,17,010 கோடி ரூபாய் மொத்த ஜிஎஸ்டி வரி வருமானத்தில் CGST பிரிவில் 20,578 கோடி ரூபாயும், SGST பிரிவில் 26,767 கோடி ரூபாயும், IGST பிரிவில் 60,911 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் செஸ் மூலம் 8,754 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டு உள்ளது.