மத்திய நிதியமைச்சகம் செப்டம்பர் 2020ல் இருந்து தொடர்ந்து பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிலும், கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட வேளையிலும் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் மூலம் தொடர்ந்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாகப் பெற்று வந்ததைப் பெருமையாகக் கூறி வந்தது.
ஆனால் கொரோனா தொற்று அலை 2வது அலையில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் ஜூன் மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் சரிந்துள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையிலும் நாடு முழுவதும் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் படிப்படியாகக் குறைந்து வரும் காரணத்தால் ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வசூல் மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என மிகவும் நம்பிக்கையாக உள்ளது மத்திய நிதியமைச்சகம்.
மத்திய நிதியமைச்சகம்
மத்திய நிதியமைச்சகம் கடந்த 9 மாதத்தில் முதல் முறையாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவான வரியை வசூலித்துள்ளது. ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் சுமார் 92,849 கோடி ரூபாய் அளவிலான வரியை வருமானமாகப் பெற்றுள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல்
ஜூன் மாதத்தில் பெற்ற 92,849 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலில், CGST பிரிவில் 16,424 கோடி ரூபாயும், SGST பிரிவில் 20,397 கோடி ரூபாயும், IGST பிரிவில் 49,079 கோடி ரூபாயும், செஸ் மூலம் 6,949 கோடி ரூபாயும் ஜூன் மாதம் மத்திய அரசு வரி வருமானமாகப் பெற்றுள்ளது.
2 சதவீதம் அதிகம்
ஜூன் 2021ல் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாய்க்குக் குறைவாக இருந்தாலும், கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 2 சதவீதம் அதிகமாகும். மேலும் இக்காலகட்டத்தில் மத்திய நிதியமைச்சகம் வரி செலுத்துவோருக்கும், அபராதம் விதிப்பிலும் பல்வேறு சலுகைகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.