அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, இந்தியாவோ, சீனாவோ... வளர்ந்த நாடோ, வளரும் நாடோ... அரசாங்கத்தை அமைதியாக நடத்த பணம் வேண்டும்.
இன்று, ஒரு நாட்டை, சக்தி மிக்க நாடாகச் சொல்கிறோம் என்றால், அவர்களின் ராணுவ ஆயுத பலத்தின் அடிப்படையில் மட்டும் சொல்வதில்லை. அவர்களின் பொருளாதாரமும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொருளாதாரத்தை வளர்த்து எடுக்கவும், முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், அரசுக்கு பணம் தேவை. ஆனால் அங்கு தான் சிக்கலே தொடங்குகின்றன. அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன?
இந்தியாவுக்கு வருமானம்
மத்திய அரசு, தன் நிர்வாகத்தை நடத்த, தேவையான பணம் வரி, வரி அல்லாத வருவாய் மற்றும் கடன் வழியாகத் தான் வந்து கொண்டு இருக்கின்றன. இந்திய அரசுக்கு, வரும் மொத்த வருவாயில், சுமாராக 18 % வருமானம், கடந்த ஜூலை 2017-ல் அமல்படுத்தப்பட்ட சரக்கு & சேவை வரி வழியாகத் தான் வந்து கொண்டு இருக்கிறது.
GST செம சரிவு
இப்போது கொரோனாவால் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்கவே அரசிடம் போதுமான பணம் இல்லை. இதற்கு மத்தியில், அரசுக்கு வர வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி வசூலும் படுத்துவிட்டதாக மத்திய Comptroller General of Accounts (CGA) அலுவலகம் ஒரு தரவைச் சொல்கிறது. என்ன கணக்கு சொல்லி இருக்கிறது?
எவ்வளவு GST சரிவு
கடந்த ஏப்ரல் 2019-ல் மத்திய அரசுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி 55,329 கோடி ரூபாயாம். ஆனால் இப்போது ஏப்ரல் 2020-ல் மத்திய அரசுக்கு வந்து இருக்கும் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வெறும் 16,707 கோடி ரூபாய் தானாம். சுமாராக 70 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் சரிந்து இருக்கிறதாம்.
கொரோனா லாக் டவுன்
கடந்த மார்ச் 25, 2020 முதல் மத்திய அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதத்தில், லாக் டவுன் அறிவித்தார்கள். இந்த லாக் டவுனில் வியாபாரிகள், வியாபாரங்களை மேற்கொள்ள முடியவில்லை. ஆகையால் GST வரி வசூலும் படுத்தேவிட்டது. ஒரு பக்கம் அரசுக்கு செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறு பக்கம் அரசுக்கு வருவாயும் சரிகிறது. எல்லாம் இந்த கொரோனாவால் வந்த வினை.