மத்திய அரசின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் பிரிவான ஜிஎஸ்டி வரி வசூல் அரசுக்கான வருமானத்தை மட்டும் உறுதி செய்யாமல் நாட்டின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் ஒரு முக்கியக் காரணி என்றால் மிகையில்லை.
இந்தியாவில் வர்த்தகச் சந்தை சரிவடைந்தால் கட்டாயம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டில் வெளிப்படும் என்பதால் ஒவ்வொரு மாத முடிவிலும் மத்திய அரசு வெளியிடும் இந்தத் தரவுகள் முக்கியமானதாக விளங்குகிறது.
ஜிஎஸ்டி வரி வசூல்
மத்திய அரசு இன்று அக்டோபர் மாதத்தின் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 2021ல் 1,17,010 கோடி ரூபாய் வரியாக வசூல் செய்துள்ள நிலையில், அக்டோபர் மாதம் 1.30 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த நிதியாண்டின் அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரல் 2021-க்குப் பின்
ஜிஎஸ்டி வரி அமைப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து அக்டோபர் மாதத்தின் 1.30 லட்சம் கோடி ரூபாய் அளவீடுகள் 2வது அதிகப்படியான அளவீடு. முதல் இடத்தில் ஏப்ரல் 2021 மாத வசூல் அளவீடுகள் உள்ளது மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரி பங்கீடு
அக்டோபர் மாதம் வசூலிக்கப்பட்ட 1,30,127 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியில், சிஜிஎஸ்டி கீழ் 23,861 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டி கீழ் 30,421 கோடி ரூபாயும், ஐஜிஎஸ்டி கீழ் 67,361 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.
ஐஜிஎஸ்டி பிரிவு கீழ் வசூல் செய்யப்பட்ட தொகையில் இறக்குமதி வரி 32,998 கோடி ரூபாயும் உள்ளது. செஸ் வரியின் கீழ் 8,484 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இறக்குமதி வரி
அக்டோபர் மாதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் வாயிலாக வசூலிக்கப்பட்ட வரி வருமானம் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இதோடு உள்நாட்டு வர்த்தகத்தின் கீழ் வரி வருமானம் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் அளவீட்டைப் பார்க்கும் போது இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருப்பது மட்டும் அல்லாமல் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து விரைவில் மீண்டு வருவதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கார் விற்பனை, சிப் தட்டுப்பாடு
மேலும் இந்தியாவில் கார் விற்பனை நிலையான வளர்ச்சி அடைந்திருந்து, சிப் தட்டுப்பாடு இல்லாமல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பும் விற்பனையும் பாதிக்காமல் இருந்திருந்தால் வரி வசூல் அளவீடுகள் அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.