செவ்வாய்க்கிழமை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் படி, அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவு 1.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் வரி வசூல் அளவு தான் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இரண்டாவது அதிகபட்ச வசூலாகும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியாக 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதம் 1.30 லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு மேல் வரி வசூல் செய்யப்பட்டது.
தீபாவளி
கடந்த 3 வருடத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகள், லாக்டவுன் அறிவிப்புகள் இருந்த காரணத்தால் வர்த்தகம் மந்தமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாத முதல் தீபாவளி என்பதால் ரீடைல் மற்றும் மொத்த விற்பனை சந்தை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.
ஜிஎஸ்டி வரி வசூல்
இதன் எதிரொலியாக ஜிஎஸ்டி வரி வசூல் வரலாற்றில் 2வது உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது, ஆனால் பலர் இந்த ஆண்டுப் புதிய உச்சத்தைத் தொடும் எனக் கணித்திருந்தனர். ஆனால் இதை எட்ட முடியாமல் போனதற்கு முக்கியமான காரணமும் உண்டு.
மத்திய, மாநில ஜிஎஸ்டி
அக்டோபர் 2022 இல் வசூலான மொத்த ஜிஎஸ்டி வரித் தொகை 1,51,718 கோடி ரூபாய். இதில் மத்திய ஜிஎஸ்டி 26,039 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 33,396 கோடி ரூபாய், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 81,778 கோடி ரூபாய்.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி
இந்த ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரிப் பிரிவில் வசூல் செய்யப்பட்ட 81,778 கோடி ரூபாய் தொகையில் 37,297 கோடி ரூபாய் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரியும், செஸ் பிரிவில் 10,505 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டு உள்ளது.
8 மாத உயர்வு
மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் தொகையான 1,51,718 கோடி ரூபாய் தான் இன்று வரை 2வது அதிகபட்சமாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 8 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
இ-வே பில்கள்
2022ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் மட்டுமே 8.3 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இது ஆகஸ்ட் 2022 இல் உருவாக்கப்பட்ட 7.7 கோடி இ-வே பில்களை விடக் கணிசமாக அதிகமாகும். இந்த அதிகரிப்புக்கு முக்கியமான காரணம் தீபாவளி, தசரா பண்டிகை விற்பனை தான்.