டெல்லி: கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 1 டிரில்லியனை ரூபாயை தாண்டி வசூலாகியுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை காட்டிலும், 10.25% அதிகரித்து, 1.05,155 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது.
நடப்பு ஆண்டில் இரண்டு இலக்க வளர்ச்சியினைக் கண்டு 1 டிரில்லியன் ரூபாயினை தாண்டியுள்ளது இதுவே முதல் முறை.
ஜிஎஸ்டி வசூல்
இதில் சிஜிஎஸ்டி வசூல் 19,193 கோடி ரூபாயாகவும், இதே எஸ்ஜிஎஸ்டி வசூல் 25,411 கோடி ரூபாயாகவும், இதே ஐஜிஎஸ்டி 52,540 கோடி ரூபாயாகவும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட வரி விகித்ம 23,375 கோடி ரூபாயாகும்), செஸ் வரி 8,011 கோடி ரூபாயாகவும் வசூலாகியுள்ளது.
அக்டோபரில் பட்டையை கிளப்பிய வசூல்
நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் போடப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் மிக மோசமான நிலையில் மிக குறைவாகவே வசூலாகிய நிலையில், அக்டோபர் மாதத்தில் 1 டிரில்லியன் ரூபாயினை தாண்டியது, வளர்ச்சிக்கான நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத அளவு வளர்ச்சி
குறிப்பாக கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் சுருக்கத்தினை கண்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் சற்று ஏற்றத்தினை கண்டது. இதே அக்டோபர் மாதத்தில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவு வளர்ச்சியினைக் கண்டுள்ளது. உண்மையில் இது நல்ல வளர்ச்சிக்கான அறிகுறியாகும்.
அரசுக்கு வருவாய் முடக்கம்
கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறித்தான அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலும் முடங்கின. இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும் முடங்கி போயின. இதனால் அரசு பலத்த நிதி பற்றாக்குறையினைம் சந்தித்து வருகின்றது.