2020ல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தைப் பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருந்த நிலையில், பண்டிகை கால விற்பனையைக் கொண்டு சரிவடைந்த வர்த்தகச் சந்தையை மீட்டு எடுக்கத்
திட்டமிட்ட மத்திய அரசு லாக்டவுன் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகக் குறைத்து வந்தது.
இதன் வாயிலாக அக்டோபர் மாதத்திலிருந்து நாட்டின் வர்த்தகச் சந்தையில் வளர்ச்சி அடையத் துவங்கிய நிலையில் பொருளாதாரமும் சரிவில் இருந்து வளர்ச்சி அடைந்து வருவதன் எதிரொலியாக டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல்
கொரோனா பாதிப்பு முடிந்து இந்தியாவில் வர்த்தக வளர்ச்சி அடையத் துவங்கிய நிலையில் டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் அளவு அதுவரை அடைந்திடாத வகையில் சுமார் 1,15,174 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட ஜூலை 1, 2017 முதல் இந்த டிசம்பர் மாதம் தான் அதிகளவில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு உள்ளது.
போலி ஈபில் சோதனை
மேலும் கடந்த 21 மாதத்தில் ஜிஎஸ்டி மாத வரி வருவாயில் டிசம்பர் மாதம் எட்டிய 1.15 லட்சம் கோடி ரூபாய் தான் அதிகமானது. இப்புதிய உயரத்தை அடைய முக்கியக் காரணமாக ஜிஎஸ்டி அமைப்பு கடந்த சில மாதங்களாகச் செய்யப்பட்டு வரும் போலி ஈபில் சோதனையும், அடுத்தடுத்த விதிக்கப்படும் வரும் ஜிஎஸ்டி வரி செலுத்தும் கட்டுப்பாடுகளும் வரி வசூலை அதிகரித்துள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்வோர் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.
87 லட்சம் GSTR-3B தாக்கல்
நவம்பர் மாதத்திற்காக டிசம்பர் 31 வரையில் GSTR-3B தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் சுமார் 87 லட்சமாக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு 2019ஐ ஒப்பிடுகையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மூலம் கிடைக்க வரி வருமானம் சுமார் 27 சதவீதமும், உள்ளூர் வர்த்தகம் மூலம் கிடைக்கும் வரி வருமான 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
3 மாதம் தொடர் உயர்வு
2020ல் கொரொனா மற்றும் லாக்டவுன் பாதிப்புக் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், 3 மாதம் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது மட்டும் அல்லாமல், டிசம்பர் 2019ல்
வசூல் செய்யப்பட்ட 1.03 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் டிசம்பர் 2020ல் 12 சதவீதம் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2020 வசூல் விபரம்
டிசம்பர் 2020ல் வசூலிக்கப்பட்ட 1,15,174 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய ஜிஎஸ்டி பிரிவில் 21,365 கோடி ரூபாயும், மாநில ஜஎஸ்டியாக 27,804 கோடி ரூபாயும், இணைக்கப்பட்ட ஜிஎஸ்டியாக 57,426 கோடி ரூபாயும், செஸ் வரியாக
8,579 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது.