டெல்லி: கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம் 1.41,384 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இது தான் அதிக வசூல் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக வசூலாகியுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாதத்தில் 14% அதிகம் என தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 2021 மாதத்தில் 1.23 லட்சம் கோடி ரூபாயாக வசூலாகியிருந்தது.
ஏப்ரல் மாதத்தில் வசூலாகியுள்ள இந்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி 27,837 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி 35,621 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 68,481 கோடி ரூபாயும் அடங்கும் (இதில் இறக்குமதி வரியாக 29,599 கோடி ரூபாயும் அடங்கும்). செஸ் வரி 9,445 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. இதிலும் 981 கோடி ரூபாய் இறக்குமதி மீதான செஸ் வரியாகும்.
தற்போது நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இந்தியாவில் வணிகம் பாதிக்கப்பட்டு வருகின்றது. எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் அந்தளவுக்கு இல்லை. மேலும் கடந்த ஆண்டில் முழு லாக்டவுன் அமலபடுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் அந்த நிலை இல்லை. ஆக தற்போது வணிக வளர்ச்சி விகிதம், பொருளாதார வளர்ச்சி விகிதமானது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. அதோடு தற்போது கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விரைவில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியிலும், நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.