ஜிஎஸ்டி என்று கூறப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடந்த ஆண்டை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வசூல் நாட்டில் 1.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.
மேலும் தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடியை கடந்து சென்று சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரி
ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து வரும் நிலையில் இந்த கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை சற்று முன் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கடந்த ஆண்டைவிட 28% ரூ.1.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடும் போது ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 5வது மாதம்
மேலும் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் 1.40 லட்சம் கோடிக்கு மேல் அதிகமாக உள்ளது என்றும், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 20 கோடியாக இருந்த நிலையில் தற்போது அதைவிட 28 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில ஜிஎஸ்டி
இதில் மத்திய ஜிஎஸ்டி வசூல் 24 ஆயிரத்து 710 கோடி என்றும் மாநில ஜிஎஸ்டி வசூல் ரூபாய் 30 ஆயிரத்து 951 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஜிஎஸ்டி வரி வசூல் 77 ஆயிரத்து 782 கோடி என்றும் இதில் 10 ஆயிரத்து 188 கோடி ரூபாய் செஸ் வரியாக மட்டும் கிடைத்துள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு பகிர்வு
மேலும் மத்திய ஜிஎஸ்டி ரூ.32,3654 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து ரூ.26,774 கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரம்
நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் ஜிஎஸ்டி வரி வசூலும் அதிகரித்து வருகிறது என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தான் ஒவ்வொரு மாதமும் வரிவசூல் உயர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications