கடந்த 01 ஜூலை 2017-அன்று தடபுடலாக GST வரியை அமல்படுத்தியது மத்திய அரசு. GST வரியை அமல்படுத்தும் போது, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நஷ்ட ஈடு (GST Compensation) தொகை வழங்கப்படும் என்று சொன்னது மத்திய அரசு.
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்து, சரியாக 3 வருடங்கள் தான் கடந்து இருக்கிறது. அதற்குள் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய GST Compensation தொகையை வழங்க முடியாது என மத்திய நிதி அமைச்சகத்தின் செயலர், அஜய் பூஷன் பாண்டே சொல்லி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இங்கு தான் பிரச்சனை தொடங்குகிறது. அந்த ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகை என்றால் என்ன? மத்திய அரசு கொடுக்க முடியாது என்பதற்கான காரணங்கள் என்ன? இந்த நஷ்ட ஈட்டுத் தொகை ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகை
ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தும் போது, மாநில கலால் வரி, மாநில விற்பனை வரி, மாநில வாட் போன்றவைகளை மாநில அரசு வசூலிக்க முடியாமல் போனது. அதை ஈடுகட்டும் விதத்தில், 2015 - 16-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 14% கூடுதலாக ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையாகக் கொடுக்க சம்மதித்து இருந்தது. இப்போது அந்த ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையைத் தான் மத்திய அரசு கொடுக்க முடியாது எனச் சொல்லி இருக்கிறது.
காரணம் என்ன
பொருளாதார வளர்ச்சி சரிந்து இருப்பது மற்றும் கொரோனா வைரஸ் பிரச்சனைகளால் போதுமான அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை. எனவே மத்திய அரசுக்கு வர வேண்டிய பல்வேறு வரி வருவாய்களும் பெரிதும் அடி வாங்கி இருக்கிறதாம். அதில் ஜிஎஸ்டி வரியும் ஒன்று. எனவே மத்திய அரசு கையில் போதிய பணம் இல்லையாம். ஆகையால் தான் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையை கொடுக்க முடியாது என மத்திய அரசு தரப்பில் சொல்லி இருக்கிறார்களாம்.
ஏன் ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகை முக்கியம்
ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து, மாநில அரசுகள், தங்கள் இஷ்டத்துக்கு வரிகளை எல்லாம் வசூலிக்க முடியாமல் போய்விட்டது. கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் கூட, மாநில மக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசியக் காரியங்களைச் செய்யக் கூட, தேவையான பணத்துக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகை அவசியமாகிறது. எதார்த்தத்தில் மத்திய அரசின் கையில் பணம் இல்லை என்றாலும், மாநில அரசுகளுக்கு வேறு வருவாய் வழிகள் இல்லாததால், மத்திய அரசின் இந்த கருத்தை, பல்வேறு மாநில அரசு தலைவர்களும் கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள்.
கேரள அமைச்சர்
மாநிலங்களுக்கு, ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுக்க முடியாது என்கிற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்தாலோ, அல்லது, தற்போது இருக்கும் ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டு முறைகளை ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றினாலோ, அது மத்திய அரசின் மீது, மாநில அரசுகள் கொண்டு இருக்கும் நம்பிக்கைக்கு இழைக்கும் துரோகம் (brazen betrayal of federal trust) எனச் சொல்லி இருக்கிறார் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்.
கொதிப்பில் பஞ்சாப்
மார்ச் 2020 வரை மத்திய அரசு, மாநிலங்களுக்கான பங்கைக் கொடுத்து இருக்கிறது. ஏப்ரல் 2020 - ஜூலை 2020 வரை இன்னும் 4 மாதங்களுக்கான ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகை பாக்கி இருக்கிறது. இந்த 4 மாத ஜிஎஸ்டி பாக்கித் தொகை, பஞ்சாப் மாநில அரசின் 2 மாத சம்பளப் பணம் எனச் சொல்லி இருக்கிறார் பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் மன்பிரீத் சிங் பாதல்.
அதிகரிக்கும் அழுத்தம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியும் ஏப்ரல் & மே மாத ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையான 4,135 கோடி ரூபாயை கொடுக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இதே போல தமிழகம் உட்பட பல மாநிலங்களும், தங்கள் பங்கைக் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். சரி 2019 - 20 வரை எல்லா நஷ்ட ஈட்டுக் கணக்கு பஞ்சாயத்தும் தீர்ந்ததா? அப்போது மட்டும் எப்படி பணம் இருந்தது?
compensation cess fund
மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையை, மத்திய அரசு மேலே சொல்லி இருக்கும் compensation cess fund-ல் இருந்து மட்டுமே கொடுக்க முடியும் என்கிறது ப்ளூம்பெர்க். ஆனால் 2019- 20 நிதி ஆண்டில் மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகைக்கே படாத பாடு பட்டும் பணத்தை தயார் செய்து இருக்கிறது மத்திய அரசு.
சிக்கலில் எதார்த்தம்
2019 - 20 நிதி ஆண்டில் மாநில அரசுகளுக்கு மொத்தம் 1.65 லட்சம் கோடி ரூபாயை ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையாகக் கொடுத்து இருக்கிறது மத்திய அரசு. ஆனால் காம்பன்சேஷன் செஸ் ஃபண்டில் வெறும் 95,444 கோடி ரூபாய் தான் வசூலாகி இருந்ததாம். ஆக கையில் இருக்கும் பணத்தை விட, மாநில அரசுகளுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைக்கு, சுமார் 70 % கூடுதலாக மத்திய அரசு செலவழித்து இருக்கிறது.
எங்கிருந்து வந்தது பணம்
மத்திய அரசு, 2017 - 18 மற்றும் 2018 - 19 நிதி ஆண்டில், காம்பன்சேஷன் செஸ் வழியாக திரட்டிய 1,57,692 கோடி ரூபாயில், மாநில அரசுகளுக்கு 1,10,421 கோடி ரூபாயை நஷ்ட ஈட்டுத் தொகையாகக் கொடுத்தது போக, 47,271 கோடி ரூபாயை கைவசம் வைத்திருந்தது. 33,412 கோடி ரூபாயை கன்சாலிடேடட் ஃபண்ட் ஆஃப் இந்தியாவில் இருந்து கான்பன்சேஷன் ஃபண்டுக்கு மாற்றினார்களாம். இந்த பணத்தை வைத்து தான், 2019 - 20 நிதி ஆண்டில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கொடுத்து இருக்கிறது.
2019-லேயே பிரச்சனை சிக்னல்
கடந்த அக்டோபர் நவம்பர் 2019 வரையான ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையை, மத்திய அரசு மாநிலங்களுக்கு சரியாகக் கொடுத்தார்களாம். அதன் பிறகு ஜிஎஸ்டி வருவாய் சரிந்ததால், மெல்ல மாநில அரசுகளுக்கு கொடுக்கும் ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுக் தொகை கொடுப்பதும் ஒத்திப் போனதாக அரசு வட்டாரத்தில் இருந்தே செய்திகள் வெளியானதாகச் சொல்கிறது இந்தியா டுடே.
2020 - 21 நிதி ஆண்டில் இருந்து தான் பிரச்சனை
கொரோனா பிரச்சனை உக்கிரமாகிக் கொண்டு இருக்கும் இந்த நிதி ஆண்டில், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையான காலத்தில் ஜிஎஸ்டி வசூல் 41 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். இதே காலகட்டத்தின் காம்பன்சேஷன் செஸ் வெறும் 14,675 கோடி ரூபாய் தான் வசூலாகி இருக்கிறதாம். இன்னும், ஏப்ரல் 2020 - ஜூலை 2020 வரையான காலத்துக்கு, இதுவரை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுக்கவில்லை. அதைத் தான் கொடுக்க முடியாது பணம் இல்லை என்கிறது மத்திய அரசு தரப்பு.